தலைநகரை பசுமையாக்குவோம்: தில்லிவாசிகளுக்கு முதல்வர் அழைப்பு
தலைநகரை பசுமையாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து
தலைநகரை பசுமையாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும், நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் தில்லிவாசிகளுக்கு முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்தார்.
கோன்ட்லி பகுதியில் ஜல போர்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அதில் பல்லுயிர் பெருக்க வழிகாட்டியை வெளியிட்டு ஷீலா தீட்தித் பேசியது:
Advertisement
தில்லியில் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படுவதால் 22 சதவீதம் பசுமை அதிகரித்துள்ளது, காற்றில் மாசு குறைந்துள்ளது.
தில்லி முழுவதும் 40 இடங்களில் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் பசுமைத் தலைநகரமாக தில்லி உருவெடுத்துள்ளது.
தில்லியை மேலும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கோன்ட்லியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இவை வளர்ந்து மரங்களாகும் போது கோன்ட்லி பகுதியே பசுமையாகக் காணப்படும்.
மரக்கன்றுகளை நட்டு பராமரித்துவரும் மாணவர்கள், சமூகத்துக்கு முன்னுதாரணமாக உள்ளனர் என்று ஷீலா தீட்சித் கூறினார்.
விழாவில் வேம்பு, மா, நெல்லி, ஆலம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள் 300 பேரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.