முகப்பு
தமிழ்நாடு

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

மாணவர்கள் உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் எந்தக் காரணத்திற்காகவும் உடற்கல்வி நேரத்தை ரத்து செய்யக் கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் பேசியது குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 8:37 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - DNS
பகிர்:

மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஜூன் 14) நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், மதுரையில் இன்று மாலை தொடங்கப்பட உள்ள அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். திருவிழாக்களுக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணில் அரசுப் பொருட்காட்சியும் வெற்றிகரமான திருவிழாவாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

காந்தி அருங்காட்சியகம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் நிறைவு பெற்று புதிய பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அண்மையில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார். மாணவர்களின் மனநலம், உள்கட்டமைப்பு வசதிகள், உணவுத் தரம், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற வழக்குகளில் உள்ள பிரச்னைகள் சட்டரீதியாக தீர்க்கப்பட்ட பின்னர் நிரப்பப்படும் என்றும் கூறினார்.

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர், மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில் மதுபானக் கடைகள் இருப்பது தவறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். இதுபோன்ற புகார்கள் மேலும் வந்தால் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் சிறிய அளவிலான ஒழுக்கப் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க மனநல ஆலோசனை, தன்னம்பிக்கை மற்றும் தன்முனைப்பு பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் எந்தக் காரணத்திற்காகவும் உடற்கல்வி நேரத்தை ரத்து செய்யக் கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கை நிலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பள்ளி இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று சமூக மற்றும் பொருளாதார காரணிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.