நகராட்சித் தேர்தலுக்கு மாவோயிஸ்ட் மிரட்டல்: ஆந்திரத்தை ஒட்டிய கஜபதியில் தீவிர பாதுகாப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை மாவோயிஸ்டுகள் சீர்குலைக்கலாம் என்கிற அச்சம் காரணமாக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை மாவோயிஸ்டுகள் சீர்குலைக்கலாம் என்கிற அச்சம் காரணமாக ஆந்திர மாநிலத்தையொட்டியுள்ள கஜபதி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கஜபதி மாவட்டத்தில் பரலாக்கிமுண்டி நகராட்சிக்கும் காசிநகர் ஏரியா கவுன்சிலுக்கும் வரும் 19ஆம் தேதி மாநிலத்தில் இருக்கும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மல்கான்கிரி போல அல்லாமல் கஜபதியில் மாவோயிஸ்டுகளின் வன்முறை அந்த அளவுக்கு இல்லை என்றாலும், அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறக் கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருக்கின்றனர்.
Advertisement
Advertisement
மாவோயிஸ்டுகளின் குற்றச்செயல்கள் அதிகம் இல்லை என்றாலும், அவர்களது மிரட்டல் கஜபதியில் இருக்கிறது. பக்கத்து மாநிலத்தில் இருந்து சமூக விரோதிகளும் மாவோயிஸ்டுகளும் ஒடிசாவுக்குள் ஊடுருவி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்புள்ளது என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
சமூக விரோதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் ஆயுதங்கள், மதுபானங்கள் கடத்துவதைத் தடுக்கவும் ஆந்திர மாநிலத்தையொட்டியிருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை எல்லைப் பகுதியில் ரோந்துப் பணி தொடர்ந்து நடக்கும்.
இந்த ரோந்துப் பணியில் மாவோயிஸ்ட் தடுப்புப் படையினரான சிறப்பு காவல் அதிகாரிகள், மாவட்டத் தன்னார்வப் படையினர் ஈடுபடுத்தப்படுவர் என்று கஜபதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி.எஸ்.மீனா தெரிவித்தார்.
தேர்தலையொட்டி பரலாக்கிமுண்டி நகராட்சிப் பகுதியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்களும் காசிநகர் ஏரியா கவுன்சில் பகுதியில் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படவிருக்கின்றன.
காசிநகர் பகுதியில் இரு வாக்குச் சாவடிகளைத் தவிர மற்ற வாக்குச் சாவடிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்தவை. அதேபோல பரலாக்கிமுண்டி நகராட்சியில் மொத்த வாக்குச் சாவடியில் சரிபாதி எண்ணிக்கை மிகவும் பதற்றம் நிறைந்தவை என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
காசிநகர், பரலாக்கிமுண்டி ஆகிய இரு பகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களே அதிக வாக்காளர்களாக இருக்கின்றனர்.