ரயில்வே தலைமையகத்தை மாற்றும் யோசனை: பிஜேடி 3 நாள் ஆர்ப்பாட்டம்
கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தின் தலைமையகத்தை புவனேசுவரத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றுமாறு
கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தின் தலைமையகத்தை புவனேசுவரத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றுமாறு மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் வி.கிஷோர் சந்திர தேவ் விடுத்திருக்கும் வேண்டுகோள், ஒடிசா மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் சதியாகும். எனவே இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முதல் 3 நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.
அமைச்சர் இவ்வாறாக வேண்டுகோள் விடுத்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது.
அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை. ஓடிசாவில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்கள் முன்பாகவும் வியாழக்கிழமை முதல் ஒரு மணி நேரம் அமைதியான முறையில் 3 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பிஜு யுவ ஜனதா தளம் தலைவர் சஞ்சய் தாஸ் வர்மா தெரிவித்தார்.
Advertisement
தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிலவி வரும் சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அந்தோனி குழுவிடம் கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத் தலைமையகத்தை புவனேசுவரத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றுமாறு மத்திய அமைச்சர் தேவ் யோசனை தெரிவித்திருந்தார்.
கடும் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2003-இல்தான் ஒடிசாவுக்கு கிழக்குக் கடலோர ரயில்வே மண்டலம் கிடைத்தது.
தற்போது அதன் தலைமையகத்தை விசாகப்பட்டினத்துக்கு மாற்றுமாறு கோருவது மத்திய அரசின் சதியாகும்.
ஒடிசா மக்களை அவமானப்படுத்துவதற்காகத்தான் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது என்று மாநில நிதித்துறை அமைச்சர் பிரசன்ன ஆச்சார்யா புகார் தெரிவித்துள்ளார்.