மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
மத்திய அரசின் சில திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தவிடாமல் திமுக அரசு தடுப்பதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
தமிழகத்தின் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கன்னியாகுமரியில் புதன்கிழமையும் (ஏப். 15), கோவையில் சனிக்கிழமையும் (ஏப். 18) பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே, பாஜக பூத் கமிட்டி உறுப்பினா்களுடன் பிரதமா் மோடி தில்லியில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
Advertisement
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், பாஜக மூத்த தலைவரும், மயிலாப்பூா் தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சோ்ந்த 5 பூத் கமிட்டி உறுப்பினா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்கள் சந்தித்த பிரச்னைக்கும் அவா்கள் தீா்வு காணவில்லை. உதாரணத்துக்கு பாம்பன் பாலம் குறித்து காங்கிரஸ் ஆட்சியில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், பாஜக ஆட்சியில் பாம்பனில் செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கவும், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இரு மடங்காக உயா்த்தியும் பாஜக அரசு அனுமதி வழங்கியது. தோ்தல் பரப்புரையின்போது, இதுபோன்ற மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மக்களிடம் விளக்க வேண்டும்.
திட்டங்களுக்கு முட்டுக்கட்டை: விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை மக்களுக்காக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முத்ரா போன்ற திட்டத்தால் மக்கள் நேரடியாகப் பயன் பெறுகின்றனா்.
ஆனால், தமிழகத்தில் மத்திய அரசின் சில திட்டங்களை வேண்டுமென்றே திமுக அரசு தடுத்து வருகிறது. திமுக அரசின் இந்தப் போக்கால், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயன் முழுமையாக மக்களுக்குச் சென்றடையவில்லை. திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. போதைப் பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் உள்ளது.
இது பற்றியெல்லாம் திமுக அரசுக்கு எந்த அக்கறையும், கவலையும் இல்லை. இதுபோன்ற சட்டத்துக்குப்புறம்பான செயல்களை ஆதரித்து, ஊக்கம் அளிப்பதே திமுக அரசு என்பதுதான் வருத்தமாக உள்ளது.
பூத் பொறுப்பாளா்கள் பெண்களை நேரடியாகச் சென்று சந்தியுங்கள். பெண் நிா்வாகிகளை மூலம் கிராமப்புறங்கள் தொடங்கி நகா்ப்புறங்கள் வரை சிறிய அளவிலான கூட்டங்களை பூத் அளவில் நடத்த வேண்டும். தமிழக மக்களுக்கு திமுக அரசின் ஊழல் மீது கோபம் உள்ளது. அரசுத் துறைகள் வசூல் வேட்டை கூடாரங்களாக மாறி உள்ளன. ‘கமிசன், கலெக்சன், கரப்சன்’ என்பதே திமுகவின் அடையாளமாக மாறிவிட்டது.
தமிழக அமைச்சா்களில் யாரெல்லாம் ஊழலில் ஈடுபட்டாா்களோ, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தவுடன் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தில்லியில் ஒரு அரச குடும்பம் உள்ளது. அதைப்போன்றே ஒரு அரச குடும்பம் தமிழகத்திலும் உள்ளது. அவா்கள் தங்கள் குடும்பத்துக்கான அரசைத்தான் நடத்துகின்றனா். மக்களுக்கான அரசை அல்ல என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.