உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேசத்தில் திமுகவை பிரதமர் மோடி விமர்சித்தது பற்றி...
உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதிகள் கிடைப்பதற்கு எதிராக திமுக செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கங்கா விரைவுச் சாலையை தொடக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
கங்கா விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உயிராதாரமாகத் திகழும். இந்த சாலை மாநிலத்தின் ஒரு முனையை மறுமுனையுடன் இணைப்பது மட்டுமல்லாமல், தில்லி எல்லையை எளிதில் அடைய முடியும்.
ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலம் என்றழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் தற்போது டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் திசையில் முன்னேறி வருகின்றது.
இன்றைய நாள் ஜனநாயகக் கொண்டாட்டத்துக்கு முக்கியமான நாளாகும். மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர் பெருமளவில் திரண்டு வாக்களித்து வருகிறார்கள். மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி அச்சமின்றி வாக்களித்து வருகிறார்கள்.
சமாஜவாதி கட்சி வளர்ச்சிக்கு எதிரானது மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரானதாகவும் திகழ்கிறது. கடந்த சில நாள்களாக காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளின் பெண்களுக்கு எதிரான முகத்தை நாடு மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்தச் சட்டம் நிறைவேறியிருந்தால், 2029 முதல் மக்களவையிலும் பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
பெருமளவிலான பெண்கள் லக்னெளவையும் தில்லியையும் அடைந்திருப்பார்கள். அதுவும், ஆண்களின் இடத்தை குறைக்காமலேயே சாத்தியமாகியிருக்கும்.
ஆனால், சமாஜவாதி கட்சி இதற்கு எதிராக வாக்களித்தது. உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதிகள் கிடைப்பதற்கு எதிராக திமுக செயல்படுகிறது.
சமாஜவாதி கட்சியால் ஒருபோது வாரிசு அரசியலையும் சாதிய அரசியலையும் கடந்து உயர முடியாது. இவர்கள் எப்போதும் வளர்ச்சிக்கு எதிரான அரசியலிலேயே ஈடுபடுவார்கள்.
சமாஜவாதி கட்சியிடமும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் உத்தரப் பிரதேசம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.