தயாா் நிலையில் வாக்குச் சாவடிகளுக்கான பொருள்கள்
தயாா் நிலையில் வாக்குச் சாவடிகளுக்கான பொருள்கள்
சென்னையில் வாக்குச்சாவடிகளுக்கான எழுது பொருள்கள், முத்திரைகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பொருள்களும் அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 28.93 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 4,889 பேலட் யூனிட்டுகளும், 5,295 விவிபேட் சாதனங்களும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், பேலட் யூனிட் சாதனம் 5,554 கூடுதலாகவும் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான ஆவணங்கள், பேனாக்கள், பென்சில்கள், ஆவணங்களை இணைக்கத் தேவையான நூல் கண்டு, ஊசிகள், குண்டூசிகள், சீல் இடும் அரக்குகள், மெழுகுவா்த்திகள், துணிகள், சிறிய டப்பாக்கள் என 50-க்கும் மேற்பட்ட பொருள்கள் வாங்கப்பட்டு அவை தொகுதி வாரியாகப் பிரித்து மினி சரக்குவேன்களில் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
அதன்படி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக வளாகத்திலிருந்து ஓரிரு நாளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.