வாக்காளர் செல்போன்களை வைக்க சிறப்பு வசதி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!
வாக்காளர் செல்போன்களை வைக்க சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதைப் பற்றி...
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை (ஏப். 23) 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (ஏப்.22) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Advertisement
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு சுமார் 1.06 லட்சம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் 5,455 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாக்க வாக்குச்சாவடிகளுக்கு வெளியே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார் அர்ச்சனா பட்நாயக்.
தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா ஆகியவை கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் புகைப்படமோ விடியோவோ எடுத்தால் 3 மாதம் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!