எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது; ஆனால்...! உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பிகார் எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி...
நியாயமான தேர்தலை நடத்த, எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அதேநேரத்தில் தகுதியானவரின் வாக்குரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டபோது தகுதியுள்ளோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்து, விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதன்படி இன்று (மே 27) தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், 2003 ஆம் ஆண்டு பிகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் குடியுரிமையை முடிவு செய்ய, அவர்களின் பெயர்களை 4 வாரங்களுக்குள் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சட்ட மேலவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக இந்த பணியை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து, "அரசியலமைப்பின்படி எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு துல்லியமான, நேர்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த வாக்காளர் பட்டியல் அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் குடியுரிமையை சோதிக்க, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க, ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஒருவரின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால் விசாரணை, ஆட்சேபனை, மேல்முறையீடு எனப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
அதேநேரத்தில் குடியுரிமை இல்லை என்று மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க மறுப்பதையும் அனுமதிக்க முடியாது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அந்த நபர் குடியுரிமை அல்லாதவர் என்று பொருள் அல்ல, குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரிகளிடமே இறுதி முடிவு உள்ளது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Supreme Court Upholds Election Commission Power To Conduct SIR Of Electoral Rolls
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.