மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!
மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டது குறித்து...
மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகித்த மனோஜ் குமார் அகர்வால், மாநில அரசின் தலைமைச் செயலராக திங்கள்கிழமை (மே 11) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.
மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான மனோஜ் அகர்வால் முன்னதாக, தேர்தல் ஆணையத்தால் கட்டாயமாக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குத் (எஸ்ஐஆர்) தலைமை தாங்கினார். இந்த நடவடிக்கையில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
Advertisement
எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது, இதுமாதிரியான லட்சக்கணக்கான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அது பல தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸின் வெற்றியைப் பாதித்ததாகவும் தேர்தல் ஆணையர் மீது முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
மேலும், வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறியிருந்தார்.
இதனிடையே, ஆளுநர் ஆர்.என். ரவியால் அம்மாநில பேரவை கலைக்கப்பட்டு, புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகித்த மனோஜ் அகர்வால், மாநில அரசின் தலைமைச் செயலராக மாற்றப்பட்டது மேற்கு வங்க அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.