முகப்பு
இந்தியா

ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரி

எல்லையில் வேலி அமைக்க எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நிலத்தை வழங்கியுள்ளதாக சுவேந்து அதிகாரி பேச்சு...

Updated On : 7 ஜூன் 2026, 7:06 pm IST
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - ஏஎன்ஐ
பகிர்:

வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு உணவு, மருந்து கொடுத்து உபசரிக்க அவர்கள் விருந்தினர்கள் அல்ல என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (ஜூன் 7) தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்சித் தொண்டர்களுக்காக தீன்தயாள் உபாத்யாய பயிற்சி வகுப்புகள் இன்று (ஜூன் 7) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டு எல்லைப் பாதுகாப்புக்காக பாஜக மேற்கொண்டுள்ள பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

''பாஜக தலைவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை மேற்கு வங்க முதல்வராக அறிவித்தபோதே ஒரு வாக்குறுதி அளித்தேன். அனைவருடனும் இணைந்து மக்களுக்கான பணியில் நான் ஈடுபடுவேன் என உறுதி எடுத்துக்கொண்டேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை நோக்கி மக்கள் நலனுக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதனைச் சிறப்பாக செய்து முடிப்பேன். பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதிகளும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.

மாவட்ட பொறுப்பாளர்கள் மாதத்திற்கு இருமுறை தலைமை அலுவலகத்துக்கு வந்து, மையக் குழு கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நாங்கள் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) நிலத்தை வழங்கியுள்ளோம். வங்கதேசத்திலிருந்து வந்தவர்களை வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி, அவர்களைக் கௌரவ விருந்தினர்களாக நாங்கள் நடத்தப்போவதில்லை'' எனக் குறிப்பிட்டார்.

summary

We will not treat Infiltrators as honoured guests West Bengal Chief Minister Suvendu Adhikari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.