ஆளுநரின் கேரள பயணம் ரத்து! இபிஎஸ் சந்திப்பு?
தமிழ்நாடு ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பற்றி...
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரின் இன்றைய கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
தவெகவிடம் பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அதிமுக ஆட்சி அமைக்க திமுகவுடன் மறைமுக பேச்சு நடத்துவதாக ஒருபுறமும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆதரவு அளிக்க போர்க் கொடி ஏந்தி புதுவை விடுதியில் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பதாக மறுபுறமும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த சூழலில், தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறாக இருக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநருடன் இன்று பகல் 12 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், தவெக தலைவர் விஜய்யும் ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.