தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை பற்றி...
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வருமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவை நேற்று தவெக பெற்ற நிலையில், இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இடதுசாரிகள் (4), விடுதலைச் சிறுத்தைகள் (2) கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
Advertisement
இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். ஆனால், இதுவரை ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை.
இதனால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.