தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
நாளை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - தவெக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
சென்னை : தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தவெக எம்எல்ஏக்களுடன் சென்னை, பனையூர் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(மே 12) மாலை ஆலோசனை நடத்தினார்.
நாளை (மே 13) சட்டப்பேரவையில் புதிய அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அதில், கட்சி எம்எல்ஏக்கள் செயல்பாடு உள்ளிட்ட விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக பேரவையில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
Advertisement
Advertisement
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பேரவையில் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தெரிவித்துள்ளார். பாமக தரப்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ள திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(மே 12) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெகவில் 108-2 = 106 எம்எல்ஏக்கள், காங்கிரஸில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் 2, இந்திய கம்யூனிஸ்ட்டில் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் 2, மன்னார்குடியில் அமமுக சார்பில் வென்றுள்ள எம்எல்ஏ காமராஜ் மற்றும் சி. வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அணியில் 30 எம்எல்ஏக்கள் என மொத்தம் 150 பேரின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Chief Minister Vijay holds key consultations with TVK MLAs and functionaries at the Panaiyur office.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.