பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
பனையூரில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறித்து...
நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றுள்ள நிலையில், பனையூரில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகள் மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி ஏற்பட்டது.
தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
Advertisement
இதில், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனப் பெரும்பாலான வாக்குக் கணிப்புகளும், ஒரேயொரு நிறுவனத்தின் வாக்குக் கணிப்பு தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் இருந்தன.
யாரும் எதிா்பாராத வகையில், தவெக வேட்பாளர்கள் பலர் திமுக அமைச்சர்கள், அதிமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளர்களைவிட அதிகமாக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தனர்.
தவெக தலைவர் விஜய், போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரம்பூரில் 53, 715 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை வென்றாா்.
மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜை 26,685 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தோற்கடித்தார்.
இந்த நிலையில், தவெக பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை வென்றுள்ளதால், ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை மற்ற கட்சிகளிடன் ஆதரவைக் கோர வேண்டும்.
இது தொடர்பாக, பனையூரில் தவெக தலைவர் விஜய், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.