அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை! சோபா - பிளாஸ்டிக் சேர் சர்ச்சை! எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
அரசு அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் சேரில் அமர வைத்ததாக கனிமொழி எம்எல்ஏ மீது எழும் புகார் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் தவறான காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கிறார்கள்.
ஒருபக்கம் தவெகவினரை இயல்பாக செயல்பட விடாமல், சமூக வலைத்தளங்களில் விடியோக்கள், புகைப்படங்கள் போட்டு பிரபலப்படுத்த ஐடி விங்குகள் படாதபாடு பட்டு வரும் நிலையில், சில இடங்களில் அதே பிரபல விடியோ மற்றம் புகைப்படங்களால், தவெக எம்எல்ஏக்கள் சிலர் பேசுபொருளாகிவிடும் சம்பவமும் நடந்து வருகிறது.
அதுபோலத்தான், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அவரே பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் இன்று வைரலாகியிருக்கிறது. அவர் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன் என மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள் பல விஷயங்களை அலசத் தொடங்கிவிட்டார்கள்.
Advertisement
Advertisement
முதலில், அரசு அதிகாரிகளை வரவழைத்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தியது ஏன்? என்பதே பலரது கேள்வி.
அடுத்து, மிகப்பெரிய சோபாவில் எம்எல்ஏ கனிமொழி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலியில் போதுமான வசதிகள் இன்றி அமர்ந்திருந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர்.
இன்று காலை முதலே, கனிமொழி யார்? ஏன் இப்படி இவர் மட்டும் மிகப்பெரிய சோபாவில் அமர்ந்திருக்கார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழ. அவரது காதுகளுக்கும் இது எட்டிவிட்டது.
உடனடியாக ஒரு விடியோ வெளியிட்டு அவரது நிலைமையை விளக்கியிருக்கிறார் கனிமொழி எம்எல்ஏ.
அந்த விடியோவில் அவர் கூறியிருப்பது, நான் அதிகாரிகளை சந்தித்தது எனது வீடு அல்ல, எனது ஜோதிட அலுவலகம். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம்.
தற்போது, எனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயிண்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே மக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன்.
எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.
புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன் என்று பதிவிட்டு, தன்னுடைய அலுவலகத்தையும் படம்பிடித்து விடியோ வெளியிட்டு அதிலும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே, விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனா, விளையாட்டு வீரர்களுடன் உணவருந்தும் விடியோவை வெளியிட, ஆனால், விளையாட்டு வீரர்கள் விடுதியில் சமைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க, நடுவில் அமர்ந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா மட்டும் ரொட்டி, வெண்ணெய், ஜாம் வைத்து சாப்பிடுவது பேசுபொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக எம்எல்ஏக்களை இயல்பாக வேலை செய்யவிட்டால், அவர்களும் தங்களது பொறுப்புணர்ந்து வேலை செய்வார்கள், தவறு நிகழ்ந்தாலும் சரி செய்து கொள்வார்கள், ஆனால் இதுபோன்ற சர்ச்சைகளால் அவர்களது கவனம் சர்ச்சைக்கு பதில் சொல்வதிலேயே முடிந்துவிடும் என மக்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.