தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்... கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூட்டாக பேட்டி
ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டியளித்துள்ளதைப் பற்றி...
ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் இருவரும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.
Advertisement
இந்த நிலையில், மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் பேசுகையில், “ஜனநாயகத்தில் இந்திய ஜனநாயகாத்தில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வருது இயல்பு. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்.
அந்த வாய்ப்பை முழு நிறைவு செய்வதற்காக எங்களிடம் ஆதரவு கோரினார்கள். நாங்கள் முறைப்படி கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்து ஆதரவு தருவது என்று முடிவெடுத்திருக்கிறோம்.
இதன் சாரம் தமிழக மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். நாங்கள் அதனை வழிமொழிகிறோம்.
விசிக தலைவர் திருமாவளவனும் பங்கேற்று ஆதரவு தரவிருந்தார். அவர் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அவர் தவெகவுக்கான ஆதரவு குறித்து பேசுவார்” என்றார்.
அதைத் தொடர்ந்து பெ. சண்முகம் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் ஒரே மாதிரியான முடிவை எடுத்திருக்கின்றன.
தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமையவேண்டியது கட்டாயம். அதுவும் நாளை மறுநாள் (மே 10) ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும்.
இல்லையென்றால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும் என்ற நெருக்கடியான நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு கேட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் எங்களுக்கு கடிதம் அனுப்பினார். அவர்களின் நிர்வாகிகள் எங்களிடம் நேரடியாக வந்து பேசினார்கள். இரண்டு கட்சியிடமும் பேசினார்கள், ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
தனிப்பெரும் கட்சி என்ற தரப்பில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவி என்பது கொல்லைபுறம் வழியாக பாஜக ஆட்சி நடத்துவது போன்றதுதான்.
அதிமுக - பாஜகவின் கூட்டணியைத் தோற்கடிப்பதுதான் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கடமை. பாஜகவின் திட்டங்களைத் தோற்கடிக்கவே நாங்கள் தவெகவுக்கு ஆதரவளித்திருக்கிறோம்.
நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவில்தான் இருக்கிறோம். ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவும் இன்னொரு தேர்தலை சந்திக்க முடியாது என்ற சூழலில் தவெகவுக்கு ஆதரவு என்பதைத் தவிர வேறொரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாது.
மாநில உரிமைகளை மீட்பது, மதவெறி சக்திகளுக்கு எதிராக திமுகவுடன் இணைந்து மாநில உரிமைகளைப் பாதுகாப்பது என்ற போராட்டம், உறவு தொடரும்” என்றார் பெ. சண்முகம்.