ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்!
ஐபிஎல் போட்டியுடன் தேர்தலை ஒப்பிட்டு மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தைப்போல நடக்கவுள்ள தேர்தல் இருக்க வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் தில்லி தோற்கடிக்கப்பட்டு சென்னை வென்றதைப்போல, தேர்தலில் தில்லி தோற்கடிக்கப்பட்டு தமிழ்நாடு வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 12) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Advertisement
பிரசாரத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், உக்ரைன், அமெரிக்க விவகாரங்களில் தலையிட்டு விஸ்வ குருவாக உள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் இலங்கையிடம் மெளன குருவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
நம் கையை எடுத்து நம் கண்ணை குத்தும் விதமாக, அதிமுக மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைய பாஜக முயற்சிப்பதாகவும், அவர்களை அழைத்துக்கொண்டு வரும் பல்லக்கு தூக்கிதான் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாஜகவை ஒருநாளாவது பழனிசாமி கண்டித்துள்ளாரா? தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கண்டித்து தமிழ்நாட்டின் நலனுக்காக ஒருவார்த்தையாவது அவர் பேசியிருக்கிறாரா? பொது சிவில் சட்டத்தில் எடப்பாடியின் நிலைப்பாடு என்ன?
காலில் விழுந்து காலை வாரிவிட்ட பழனிசாமி, சொந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார். பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி, தமிழ்நாட்டின் இருண்ட காலம் எனப் பேசினார்.
பின்னர், நடக்கவுள்ள தேர்தல், தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமானது என்பதை விளக்கும் வகையில் ஐபிஎல் போட்டியை மேற்கோள் காட்டி மு.க. ஸ்டாலின் பேசினார்.
''நேற்று ஐபிஎல் பார்த்திருப்பீர்கள். அதில், சென்னை வெற்றி பெற்றது. தில்லி தோற்கடிக்கப்பட்டது. அதேபோல இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது தில்லி அணியா? தமிழ்நாட்டு அணியா? என மக்களிடம் கேள்வி எழுப்பினார். தில்லியை வீழ்த்தி தமிழ்நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தலில் திமுக வெற்றிக்காக அல்ல? கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக அல்ல? ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.