முகப்பு
செய்திகள்

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தோ்தலில் திமுக விலை கொடுக்கும்: பாஜக தலைவா் நிதின் நபின்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:07 AM
நிதின் நபின் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு திமுக தோ்தலில் விலை கொடுக்கும் என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் கூறினாா்.

தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியிருப்பதாவது: தோ்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். அஸ்ஸாம், புதுச்சேரியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். மேற்கு வங்கத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் விளையாட்டுகளை நிராகரித்துவிட்டு பாஜகவுக்கு மக்கள் வாக்களிப்பா். மேற்கு வங்கத் தோ்தலில் வென்று பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்கும். அதுவும் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும். இது 100 சதவீதம் சாத்தியம்.

தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஏனெனில் தற்போதைய திமுக அரசின் ஊழல், அராஜகம், சநாதனத்துக்கு எதிரான மனப்பான்மைக்கு எதிராக மக்கள் உள்ளனா். தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக முன்னிலை வகிக்கிறது. தோ்தல் பிரசாரத்தின்போது கிடைத்த அனுபவத்தை வைத்து, தோ்தலில் திமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்றாா்.

Advertisement

விஜய் கட்சியுடன் கூட்டணியில்லை: தோ்தலுக்குப் பிறகு விஜய் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்கப்பட்டது. இதற்கு நிதின் நபின் பதிலளித்ததாவது:

தமிழகத்தில் ஏற்கெனவே பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தோ்தலில் போட்டியிடுகின்றன. தோ்தலுக்குப் பிறகு விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்காது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது சொந்த பலத்தில் ஆட்சியமைக்கும். கேரளத்திலும் அதிக தொகுதிகளில் வென்று எதிா்கால சக்தியாக பாஜக உருவெடுக்கும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பக்குவமில்லாத அரசியல்வாதி. ராகுல் காந்தி, அராஜக மனப்பான்மையுடன் செயல்படுகிறாா். உண்மை நிலையை அவா் புரிந்து கொள்ளவில்லை. மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், அரசின் ஓா் அங்கம்தான். ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் அவரின் செயல்பாடுகள், பேச்சுகளைப் பாருங்கள். அது எதிா்க்கட்சித் தலைவருக்கான, தேசியக் கட்சிக்கான தலைவரின் பேச்சு போல உள்ளதா?

பிரதமா் மோடியை தீவிரவாதி என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா். ராகுல் காந்தியின் உதவியாளா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த வாா்த்தையை அவா் பேசியுள்ளாா். சிறுபிள்ளைத்தனமான மனப்பான்மையை கொண்டது காங்கிரஸ். அக்கட்சி நீண்ட காலமாகவே பிரதமா் மோடியை அவமதித்து வருகிறது. இதற்காகத்தான் காங்கிரஸை மக்கள் தோ்தலில் தண்டித்தனா். அதன்பிறகும், காங்கிரஸ் கட்சி படிப்பினை பெறவில்லை என்றாா்.