முகப்பு
இந்தியா

மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 12 ஆண்டு சாதனைத் திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

Updated On : 10 ஜூன் 2026, 4:50 am IST
நிதின் நபின் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 12 ஆண்டு சாதனைத் திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, தில்லி பாரத் மண்டபத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் ஊடகவியலாளர்களின் சந்திப்புக்கு பாஜக தேசிய தலைமை செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement

Advertisement

கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்களை நிதின் நபின் வழங்கினார்.

பாரம்பரியத்துடன் சேர்ந்து மேம்படும் வளர்ச்சி, மக்கள் சேவையே தீர்வு, தேசத்தைக் கட்டமைப்பதே இயக்கம், தேசமே முதன்மை என்பதே தாரக மந்திரம் ஆகிய கையடக்க குறிப்புகள், 2014-2026 வரையிலான ஆட்சியின் முக்கியத் திட்டங்களை விளக்கும் குறிப்புகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் முக்கிய நோக்கங்கள் மற்றும் வளர்ச்சி மைல்கல் சாதனைகள் இந்தக் கையடக்க குறிப்புகளில் முன்னிலைப்படுத்தப்பட்டன.

மோடி அரசின் தொலைநோக்குப் பார்வை, உத்திசார் நோக்கங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து நிதின் நபின் விளக்கியதுடன் நாடு முழுவதும் இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசின் மாற்றத்தை நோக்கிய பயணம் மற்றும் நிர்வாக மாதிரியை எடுத்துரைக்கும் வகையில், பாஜகவின் எண்ம மற்றும் தொழில்நுட்பக் குழுவால் தயாரிக்கப்பட்ட 15 நிமிஷ சிறப்பு ஆவணப்படம் நிகழ்ச்சியின்போது திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட உயர்நிலைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களுடன் உயர்நிலைத் தலைவர்கள் வெளிப்படையான மற்றும் அலுவல்பூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இது நிர்வாகம், தேசிய வளர்ச்சி மற்றும் பொதுத் தொடர்பு ஆகியவை குறித்த ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழிவகுத்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.