முகப்பு
சிறப்புச் செய்திகள் / கட்டுரைகள்

பேரவைப் பதவிக் காலம் நாளையுடன் நிறைவு! அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன?

பேரவைப் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன என்பது பற்றி..

தமிழக சட்டப்பேரவை - IANS
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அரசு பதவியேற்காவிட்டால் என்னவாகும்? அடுத்து ஆளுநர் செய்யப்போவது என்ன? என்பது குறித்த அடுக்கடுக்கான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.

முதற்கட்ட தகவல்கள், 2026ஆம் ஆண்டு மே 10ஆம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய், தன்னுடைய கட்சிக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், தொங்கு பேரவையில் ஒரு கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

மே 10ஆம் தேதியுடன், நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் நிறைவடையும் நிலையில், ஆளுநர் முன்பு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருக்கும். தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் அல்லது அடுத்த இடத்தில் இருக்கும் கட்சியை அழைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் அல்லது புதிதாக தேர்தல் நடத்த பரிந்துரை செய்யலாம்.

Advertisement

Advertisement

மே 9ஆம் தேதி பிற்பகல் 12 மணி நிலவரப்படி, தவெகவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளின் ஆதரவுடன் 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. திமுகவில் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய முடிவை விரைவில் அறிவிக்கவிருக்கிறார். அவர் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தால், உடனடியாக தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பார்.

ஒருவேளை, விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு அளிப்பதாகக் கூறி அதன் தலைவர் தொல். திருமாவளவன் ஏதேனும் நிபந்தனைகள் விதித்து, அதனை தவெகவால் ஏற்க முடியாவிட்டால் அப்போது என்னவாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய், ஆளுநரிடம் அளித்த ஆதரவுக் கடிதத்தில் அமமுக உறுப்பினரின் போலியான கடிதமும் இடம்பெற்றிருப்பதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேற்று இரவிலிருந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். இதற்கு தவெக தரப்பிலிருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.

மற்றொருபக்கம், அதிமுக புதிய உறுப்பினர்கள் புதுச்சேரி சொகுசுவிடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடிய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, நல்ல செய்தி காத்திருக்கிறது என்று ஆரூடம் சொல்லிச் சென்றிருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்பதும் மர்மமாகவே உள்ளது.

இருப்பதோ ஒரே நாள்..

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 10ஆம் தேதி நிறைவு பெறவிருக்கிறது. விஜய்யின் தவெக மட்டுமே தனிப்பெருங்கட்சியாக வென்றிருக்கிறது. 107 - 108 தொகுதிகளில் வென்றிருப்பதால், ஆளுநர் அர்லேகர் தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாவிட்டால், அடுத்த இடத்தில் இருக்கும் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்கலாம்.

அதிரும் அரசியல் களம்.. தவெக பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும்பட்சத்தில் திமுக - காங்கிரஸ் - இதர சிறு கட்சிகள் அல்லது அதிமுக - இதர கட்சிகள் கூட்டணியாக ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைக்கலாம்.

பெரும்பான்மை பெறாத கட்சி, வெளியிலிருந்து கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம்.

எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்யலாம். அவ்வாறு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், சட்டப்பேரவை கலைக்கப்பட்டு அடுத்த ஆறு மாதங்களுக்குள் புதிதாகத் தேர்தல் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக விளங்குகிறது. ஆனால், பெரும்பான்மை என்ற 118 எண்ணை தவெகவால் இதுநாள் வரை பெற முடியவில்லை.

திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வென்றுள்ளன. எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைத்தும் 118 இடங்களை பெற முடியாத நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை மாறியிருக்கிறது.

ஏதேனும் மேஜிக் நிகழ்ந்து நாளை மாலைக்குள் தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்பாரா? இல்லை ஆளுநரை பின்னால் இருந்து இயக்குவதாக பாஜக மீது எழும் குற்றச்சாட்டு உண்மையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரலாம்.

summary

As the term of the Assembly ends tomorrow, what will the Governor do next?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments