தவெக - பாஜக இணக்கம்? ஒரு வரிகூட மாற்றாத ஆளுநர்! அனைத்தும் திமுக அரசின் திட்டங்கள்!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்...
தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரிகூட மாற்றாமல் ஆளுநர் வாசித்துள்ளது, தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து நாளை ஜூன் 19, ஜூன் 22, 23 என 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் ஜூன் 23 ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
Advertisement
Advertisement
"ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான Content material-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார்.
இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரிகூட மாற்றாமல் படித்துள்ளார் ஆளுநர். இதிலிருந்தே தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது
திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளைதான் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது. திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டுள்ளார்கள். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் உரை உள்ளது.
முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.
தேர்தலின் போது அறிவித்த பல அறிவிப்புகளின் டிரெய்லராக, ப்ளூ ப்ரிண்ட்டாக இந்த கூட்டம் இருக்கும் என நினைத்தோம். மக்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம் என்பதை காட்டும் முன்னோட்டமாக சமீபத்தில் வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கை வெளியிடப்பட்டது
தேர்தல் பிரசாரத்தின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால், இன்றைய நிலையை பார்க்கும்போது, திரைப்படத்தில் வருவதுபோல், 'கண்ணாடிய பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்' என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
பேரிடர் காலங்களில் உணவுப் பொருள்கள், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதுபோல, ஆட்சி அமைந்த நாள் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முதலமைச்சர் PANIC BUYING (பீதி காரணமாக வாங்குவது) செய்து வருகிறார்.
'நான் முதல்வன்' திட்டம் என்பது நல்ல திட்டம். அது ஸ்டாலின் பெயரிலோ கலைஞர் பெயரிலோ இருக்கும் திட்டம் கிடையாது. ஆனால், 'நான் முதல்வன்' என்று சொன்னாலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர்தான் ஞாபகத்திற்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தோடு திட்டத்தின் பெயரை மாற்றி எக்ஸ் தளத்தில் சாதனை பதிவுகளை நீக்கியுள்ளனர்" என்று பேசியுள்ளார்.