நாங்கள் வீட்டுக்குச் சென்றபிறகு பேரவையில் அமைச்சர் பேசுகிறார்! என்ன மரபு இது? உதயநிதி
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி....
முதல்வர் விஜய் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார்.
அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்று முதல்வர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச முற்பட்டபோது பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. பின்னர் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
அப்போது உதயநிதி பேசுகையில்,
"நேற்று பேரவையில் நாங்கள் பேசும்போது அமைச்சர்கள் எழுந்து பதிலளிக்க அனுமதி கொடுத்தீர்கள். அதேபோல இன்று முதல்வர் பேசும்போது அதற்கு பதிலளிக்க எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
முதல்வர் பேசும்போது 'டாஸ்மாக்கில் கட்சி நிதி வசூல் செய்கிறார்கள் என்று கூறினார். எந்த கட்சி என்று சொல்லவில்லை. தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும்.
நேற்று நான் பேசி முடித்ததும் அவை முடிந்துவிட்டது என்று சொன்னீர்கள். ஆனால் நாங்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பேரவையில் அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்ன மரபு இது? நீங்கள் பேசிக்கொண்டே இருப்பீர்கள், நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா?
அதுமாதிரி முதல்வர் பேசும்போது நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் தவறான கருத்துகளைப் பேசும்போது அமைதியாக இருக்க முடியாது. ஆதாரங்களுடன் சொன்னால் நாங்கள் நிரூபிக்கத் தயார்" என்றார்.
பின்னர் தொடர்ந்து திமுகவை முதல்வர் விஜய் விமர்சித்துப் பேசிய நிலையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
opposition leader udhayanidhi stalin reply to cm vijay on allegations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.