சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டமா? உதயநிதி ஸ்டாலின்
நாகர்கோவில் மாற்றுத்திறனாளி, நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு...
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி, நீதிமன்றக் காவலில் இருந்தபோது காவல்துறை விசாரணையின்போது இறந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணையில் இருந்த மாற்றுத் திறனாளி சபரிவர்மன் மரணமடைந்துள்ளார். தனது கணவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து நீதிபதி முன்னிலையில் சபரிவர்மன் உடல் கூராய்வு பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அதில் அவரின் உடலில் காயங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது.
Advertisement
Advertisement
குடும்ப சூழல் கருதி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும். சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
One law for the common man, and a different one for a TVK functionaries: Udhayanidhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.