மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியது குறித்து...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்டமாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.
Advertisement
இதனிடையே, ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செராம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி,”மோடி தன்னை ஒரு 'தேசபக்தர்' என்று கூறிக்கொள்கிறார், ஆனால் அவர் நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி ஏழைகளுக்கு உதவி செய்வதில்லை. மாறாக பணக்காரர்களுக்கு உதவி செய்கிறார். இதையேதான், பிரதமர் மோடி நாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்குமே அதிகாரம் வேண்டும். ஆனால் மக்களுக்காக உழைக்க மாட்டார்கள்.
மேலும், பிரதமர் எங்கு சென்றாலும் மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் பரப்புகிறார்.
நாட்டில் இரண்டு கருத்தியல்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஒன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் வெறுப்பு மற்றும் வன்முறை, மற்றொன்று அதற்கு எதிரான காங்கிரஸின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம்” எனத் தெரிவித்தார்.