அமெரிக்காவுக்கு கீழ்ப்படியும் பணியாளராக இருக்கிறார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்!
இந்தியர்கள் 3 பேர் அமெரிக்காவின் தாக்குதலில் பலியானது தொடர்பாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்.
ஒரு கீழ்ப்படியும் பணியாளரைப் போன்று அமெரிக்காவின் உத்தரவுகளை பிரதமர் மோடி கேட்டுக் கொள்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் இந்தியா அமெரிக்க வெளியுறவுத் துறை பொறுப்பாளரிடம் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவர் இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்கா தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியானதற்கு எந்த வருத்தமும், மன்னிப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றது.
Advertisement
Advertisement
அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளுக்கு உடனடியாக கீழ்ப்படியுங்கள். எந்த மீறலும் பொறுத்துக்கொள்ளப்படாது என அமெரிக்கா கூறியிருக்கிறது. அவர்களின் வார்த்தைகளைப் படியுங்கள். எந்த சுதந்திர நாடும் இப்படியான மொழியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், நம்முடைய பிரதமர் அமைதியாக இருக்கிறார். அவர்களின் உத்தரவுகளை ஒரு கீழ்ப்படியும் பணியாளரைப் போன்று கேட்டுக் கொள்கிறார்.
சமரசத்திற்கு உள்ளான பிரதமர் நாட்டின் மரியாதையைப் பாதுகாக்கமாட்டார். ஏனென்றால், நாட்டை அவமதிப்பவர்களின் கட்டுப்பாட்டில் அவர் உள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணையை ஏப்ரல் 13 முதல் முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா, ஈரானுக்கு கப்பல்கள் செல்வதைத் தடுத்துள்ளது. இந்த நிலையில், ஓமன் வளைகுடாவில் இந்தியர்கள் இருந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட்டின், ”பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேண, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அனைத்து வர்த்தகக் கப்பல்களும் அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். அமெரிக்கா உத்தரவை மீறி ஈரானிய எண்ணெயை சட்டவிரோதமாக கடத்துவது பொறுத்துக்கொள்ளப்படாது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தெரிவித்திருந்தார்.