பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
பெட்ரோல் விலை கடுமையாக உயரும் என ராகுல் காந்தி பேசியது குறித்து...
ஈரான் போரால் எண்ணெய் மற்றும் பெட்ரோலின் விலை கடுமையாக உயரும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசியதாவது:
”பாஜகவும், பிரதமர் மோடியும் சேர்ந்து ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் தாக்குகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றனர். இதை அவர்கள் நாடு முழுவதும் செய்கின்றனர். மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே, இதுபோன்ற வழிகளில் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.
நாட்டின் விவசாயிகள் விற்கப்பட்டுவிட்டனர். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விற்கப்பட்டுவிட்டன. நம்முடைய தரவுகள் விற்கப்பட்டுவிட்டன. நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி பாதுகாப்பும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அமரிக்காவைக் கலந்தாலோசிக்காமல் இந்தியா வேறு யாரிடமும் எண்ணெய் வாங்க முடியாது. ஈரான், ரஷியா, சௌதி அரேபியா மற்றும் வெனிசுவேலா போன்ற எந்த நாடுகளிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்க வேண்டுமென்றாலும் முதலில் அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டும். ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. வரும் மாதங்களில் எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலை கடுமையாக உயரும் என்பதை நீங்கள் காண்பீர்கள்” என்று பேசினார்.
Rahul Gandhi has stated that the prices of oil and petrol will rise sharply due to the war involving Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.