வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரி
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளதாக அந்த மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சில தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை (மே 2) நடத்தப்பட்டது.
ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் வரும் மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Advertisement
இதனிடையே, முழுமையாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் பேசியிருப்பதாவது:
“இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், சட்டம் மற்றும் அறிவிப்புகளின்படி, வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்களும், மத்திய துணை ராணுவப் படையினரும் மற்றும் நமது கணிகாணிப்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
உள் அடுக்கில் மத்திய ஆயுதக் காவல் படை, அதனைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறை, பின்னர் மாநில காவல்துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த பிஎன்என்எஸ்-இன் பிரிவு 163 என்னும் சட்டம் அமலில் உள்ளது.
மேலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை. பார்வையாளர்கள் உள்பட அலட்சியமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.