ரூ.65,000 உதவித்தொகை... முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ’தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்' 2024-26 ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் 25 வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ’தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’ கீழ் 2024-26-ம் ஆண்டுகளுக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று (06.08.2024) முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 26.08.2024 ஆகும்.
தேர்வுமுறை:
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்திற்கானத் தேர்வுகள் மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலையில் கணினி அடிப்படையிலான தேர்வும், இரண்டாம் நிலையில் விரிவான எழுத்துத் தேர்வும், மூன்றாம் நிலையில் நேர்முகத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 25 வல்லுநர்கள் கருப்பொருள்கள் பகுதிகள் அடிப்படையில் நீர்வளங்களை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தி விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல், ஊரக மற்றும் நகர்ப்புர குடியிருப்புக்கள், கல்வித் தரத்தை உயர்த்துதல், சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துதல், அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம், உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, முறையான கடன், இளைஞர் நலன், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பருவநிலை மாற்றம், தரவு நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் நியமனம் செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை:
இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதி:
(i) விண்ணப்பதாரர் தொழிற்கல்வி படிப்புகள் (பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல்) தொடர்பாக இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு (அல்லது) கலை/அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பை இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் 1956, பிரிவு 3 இன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
• முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
• பணி அனுபவம் கூடுதல் அனுகூலமாக கருதப்படும்.
• ஆராய்ச்சி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
• தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது 26.08.2024 ன்படி, 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022-24ல் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 30 புத்தாய்வு வல்லுநர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.
இணையம் மூலம் விண்ணப்பிக்க:
அறிக்கையினைத் தரவிறக்கம் செய்ய https://www.tn.gov.in/tncmfp/notification_tamil.pdf இந்த இணையதளப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.
இணையம் வழியாக விண்ணப்பிக்க https://www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp இந்த இணையதளங்களைப் பயன்படுத்தவும்.
முக்கியத் தேதிகள்:
இவை, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டத் தகவல்களாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.