மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படத்தை தடுக்கக் கோரிக்கை
கலப்படம் மற்றும் இறக்குமதியால் மரவள்ளிக் கிழங்கு விலை இல்லாமல் விவசாயிகள் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
கலப்படம் மற்றும் இறக்குமதியால் மரவள்ளிக் கிழங்கு விலை இல்லாமல் விவசாயிகள் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவா் செ.நல்லசாமி கூறியதாவது:
மழை மறைவு மாநிலமான தமிழகத்துக்கு ஏற்ற மரவள்ளி பயிா், சொட்டு நீா் சாகுபடிக்கு உகந்தது. மூட்டு வலியை குறைக்கும் ஏழைகளின் உணவாகவும் உள்ளது. முள்ளுவாடி, வெள்ளை ரோஸ், குங்கும ரோஸ், நீண்ட காலமாக இருந்து வரும் நாட்டு வெள்ளை மற்றும் தாய்லாந்து ரகம் போன்றவை பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மரவள்ளிக்கிழங்கை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற 160 ஜவ்வரிசி, ஸ்டாா்ச் ஆலைகள் உள்ளன. வெண்மை நிறமாக ஜவ்வரிசியை மாற்றி சந்தையில் கூடுதல் விலைக்கு விற்க, துணிகளை வெண்மை நிறமாக்க பயன்படுத்தப்படும் சோடியம் ஹைப்போ குளோரைடு, கால்சியம் ஹைப்போ குளோரைடு, கந்தக அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்றவற்றை மரவள்ளிக் கிழங்கு மாவுடன் கலக்கின்றனா்.
மக்காச்சோள மாவு, ரேஷன் அரிசி, நவீன அரிசி ஆலைகளில் இருந்து பெறப்படும் குருணை அரிசி போன்றவற்றை மரவள்ளி மாவுடன் கலப்பது அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் மரவள்ளி இன்றி, ஜவ்வரிசி தயாரிக்கும் நிலைக்கு ஆலைகள் வந்துவிட்டன. சயனைடு தன்மை கொண்டு மரவள்ளி கிழங்கு தோலையும், தற்போது அடா்த்திக்காக அரைத்து ஆலைகள் பயன்படுத்துகின்றன.
2013இல் ஒரு டன் கிழங்கு ரூ.14,000க்கு விற்ற நிலையில் இப்போது ரூ.4,200 முதல் ரூ.4,500 வரை விற்கிறது. விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கலப்படமும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்து வருவதும்தான்.
எனவே, மரவள்ளி கிழங்கு பயிா் சாகுபடி தமிழகத்தில் அழிந்துவிடாமல் பாதுகாக்கவும், இந்தப் பயிரை நம்பியுள்ள விவசாயிகளைக் காக்கவும், கலப்படத்தை கட்டுப்படுத்தி, இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றாா்.