16.4.1976: மக்களைப் பிளவுபடுத்த மொழியைக் கருவியாக பயன்படுத்தக் கூடாது: சென்னையில் ராஷ்டிரபதி உரை
மக்களைப் பிளவுபடுத்த மொழியைக் கருவியாக பயன்படுத்தக் கூடாது...
சென்னை, ஏப். 15- மக்களின் வாழ்க்கையில் மொழிகள் சக்திமிக்க அம்சங்களாக விளங்குகின்றன. மொழிகளை மக்களை ஒன்றுபடுத்துவதற்கான சாதனங்களாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர ஒருபோதும் அவர்களைப் பிளவுபடுத்துவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்று ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமது இன்று சென்னையில் கூறினார்.
சென்னை எழும்பூரில் தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் இதர இந்திய மொழிகளுக்கான ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டிடத்தை அவர் இன்று மாலை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் "தன் மொழி மீது ஒருவருக்கு உள்ள பற்றுதல், சில சமயங்களில் குறுகிய வடிவைபெற்று ஒருவிதமான "வெறி"யையும் ஏற்படுத்திவிடுகிறது" என்றார். "பல்வேறு மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி மனப்பான்மையுடன் படிப்பதானது சகிப்புத் தன்மையை வளர்க்கும். சொந்த மொழியை மாத்திரமல்லாது பிற மொழிகளைப் பற்றியும் அறிய அது உதவும் என்று ராஷ்டிரபதி கூறினார்.
Advertisement
தமிழ் மொழியைப் பற்றி ராஷ்டிரபதி குறிப்பிடுகையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து செழித் தோங்கி வரும் உலக மொழிகளில் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கி வருகிறது தமிழ் மொழி என்றார். அது பழமையான மொழியாக இருந்தாலும், தமிழ்மொழியானது, இன்றும் புத்தம் புதிய துடிப்புடனே விளங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் ஆழமும், அளவும் அதன் பரந்த மனப்பான்மை, பொது நோக்குத் தன்மை ஆகியவற்றுக்கு ஈடாக உள்ளன. ...
சீனாவுக்கு இந்தியத் தூதர் நியமனம்
புது டில்லி, ஏப். 15- சீனாவுக்கு கே. ஆர். நாராயணன் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டுடன் சகஜ உறவை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியின் பகுதியாக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் இதை வெளி உறவு அமைச்சர் ஒய். பி. சவாண் அறிவித்த போது, அங்கத்தினர்கள் கைத் தட்டி வரவேற்றனர். தூதர் அளவில் ராஜதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது என்று அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். எல்லா நாடுகளுடனும், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை விருத்தி செய்து கொள்வது என்ற இந்தியாவின் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வும் கூறினார்.