4.6.1976: சம்ஸ்கிருத இலக்கியங்களை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கவேண்டும் - ராஷ்டிரபதி
சம்ஸ்கிருத இலக்கியங்களை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கவேண்டும்...
புனா, ஜூன். 3 - பள்ளிப் படிப்பிலும், கல்லூரிப் படிப்பிலும் சம்ஸ்கிருதத்துக்கு உரிய உண்மையான ஸ்தானத்தைக் கொடுத்ததாக வேண்டும். இந்தப் புராதன மொழியிலுள்ள முக்கிய இலக்கியங்களை எல்லா இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று ராஷ்டிரபதி பக்ருத்தீன் அலி அகமது கூறினார்.
சம்ஸ்கிருத இலக்கியத்தின் நயம், உன்னதச் சிறப்பு ஆகியவற்றைத் துய்க்க சாமான்ய மக்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்றார்.
சம்ஸ்கிருத கலைக்களஞ்சிய அகராதியின் முதல் பாகத்தை வெளியிட்டு வைத்து ராஷ்டிரபதி பேசினார். புனாவில் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சிக் கழகத்தில் விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
நமது கலாசாரத்திலும் சிந்தனையுலகிலும், சம்ஸ்கிருதத்தின் செல்வாக்குநீக்கமற நிறைந்திருக்கிறது என்றும், பன்னெடுங் காலமாக, நாட்டை ஒன்றுபடுத்தி வந்திருக்கும் வலிமைவாய்ந்த சக்தியாக அது இருந்திருக்கிறது என்றும் ராஷ்டிரபதி சொன்னார்.
குமரி முதல் காஷ்மீர் வரையுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்கள் சம்ஸ்கிருத மொழியின் பல்வேறு துறைகளுக்கு வளம் கூட்டி வந்திருப்பதயும் ராஷ்டிரபதி சுட்டிக் காட்டினார்.
வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றிக்கிளைத்தவை. தென்னிந்திய மொழிகள் இந்தப் புராதன மொழியிடமிருந்து ஆக்கம் பெற்றவை என்றும் அவர் சொன்னார்.
ஹிந்தியையும் தற்போது இதர மொழிகளையும் வளமுறச் செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கிறோம். சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் கலாச்சாரத்திலும் பொதிந்துள்ள அரிய விஷயங்களை இந்தப் பணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும் என்றும் ராஷ்டிரபதி கூறினார்.
நமது மொழிகள் அனைத்துமே நமது கலாசாரத்துக்கு வளம் சேர்ப்பவை தான். நமது கலாசாரத்தின் பிரதான அம்சம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்றார்.
பல்வேறு மொழிகள், மதங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள் நிறைந்துள்ள இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்தி மக்களை நெருக்கமாகப் பிணைக்கும் அம்சங்களைத்தான் நாம் எப்போதும் வலியுறுத்தி வர வேண்டும் என்றார்.