21.4.1976: வறட்சிப் பகுதிக்கு புயலை திருப்ப முடியுமா என ஆராய நிபுணருக்கு மந்திரி யோசனை!
வறட்சிப் பகுதிக்கு புயலை திருப்ப முடியுமா என ஆராய நிபுணருக்கு மந்திரி யோசனை...
சென்னை, ஏப். 20- புயல் மற்றும் புயல் சின்னம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இயலுமா என்று கண்டறிய அவை உருவாவதன் மர்மத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்குமாறு வானிலை நிபுணர்களை மத்திய சுற்றுலா சிவில் விமானப் போக்குவரத்து மந்திரி ராஜ் பகதூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வறட்சிப் பகுதிகளில் மழை பெய்யச் செய்ய அப்பகுதிகளுக்கு புயல் சின்னங்களை திருப்பிவிட முடியுமா என்றும் வெள்ளப் பகுதிகளை புயல் சின்னம் தாக்காமல் வேறிடத்துக்குத் திருப்ப முடியுமா என்றும் ஆராயுமாறும் மந்திரி கூறினார்.
பருவ மழையை நிச்சயமாக நம்பி நிற்கமுடியாத இந்தியா போன்றுள்ள நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமானது என்றார் அவர்.
Advertisement
Advertisement
ஆசிய பசிபிக் பிராந்திய பொருளாதார சமூகக் கமிஷன் உலக வானியல் அமைப்பு ஆகியவற்றின் வெப்ப மண்டல நாடுகளிலான புயல்கள் பற்றிய குழுவின் 3வது மாநாட்டை மந்திரி ராஜ்பகதூர் துவக்கிவைத்துப் பேசினார். ...
புயலை கண்காணிக்க விமானம்
விமானத்தை அனுப்பி வங்கக் கடலிலும் அரபுக் கடலிலும் உருவாகும் புயல்களை அருகில் சென்று அவற்றை ஆராயும் ஏற்பாடு வருகிற புயல் சீசனிலிருந்து துவங்கும் என்று ராஜ் பகதூர் தெரிவித்தார்.
புயல் பற்றி முன்கூட்டி அறிந்து எச்சரிக்கை தெரிவிக்க சென்னை, பம்பாய், கல்கத்தா உட்பட ஏற்கனெவே 5 இடங்களில் புயல் கண்காணிப்பு ராடார்கள் செயல்பட்டு வருகின்றன. கோவாவில் அடுத்த ஆண்டில் ஒன்று அமைக்கப்படும். நடப்பு திட்ட காலத்தில் காரைக்காலிலும், மசூலிப்பட்டினத்திலும் இவ்வித ராடார்கள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
புயல்களினால் ஏற்படும் சேதத்தின் அளவைப் பார்க்கும் போது இவை பற்றி முன்கூட்டி துல்லியமாக அறிவதற்கும் ஆகும் செலவு பெரிதல்ல என்றார் அவர். ...
எல்லையில் துப்பாக்கிச் சூடு: டாக்காவிடம் ஆட்சேபம்
புது டில்லி, ஏப். 20- நேற்று மேகாலயாவில் எல்லை பந்தோபஸ்துப் படை ரோந்து கோஷ்டிகள் மீது இந்தியா வங்கதேச எல்லையில் மறு பக்கத்திலிருந்து நடந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் குறித்து இந்திய அரசு கடுமையான ஆட்சேபணையை வங்காள தேசத் தூதரகத்திடம் இன்று தாக்கல் செய்துள்ளது.
இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. எல்லை பந்தோபஸ்து படை டைரக்டர் ஜெனரல் அசுவினிகுமாரும் இருந்த ரோந்து கோஷ்டி மீது நடந்த இரண்டாவது துப்பாக்கி பிரயோகத்தில், ரோந்து கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். இந்தச் சம்பவம் கடுமையானது என்று இந்தியா கூறியுள்ளது.
இரண்டு சமயங்களிலும் எல்லை ரோந்து கோஷ்டி இந்தியப் பகுதிக்குள் இருந்த போதே காரணமின்றி துப்பாக்கியால் சுடப்பட்டன.
இச்சம்பவம் மிகவும் கடுமையானது என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆட்சேபணைக் குறிப்பு புது டில்லியிலுள்ள வங்க தேசத் தூதரகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...
April 21, 1976: Minister Suggests Expert Study Feasibility of Diverting Cyclone to Drought-Prone Region
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.