1.6.1976: தானியத்தைச் சேமிக்க பள்ளிக் கட்டடங்களும் பயன்படுத்தப்படலாம்
தானியத்தைச் சேமிக்க பள்ளிக் கட்டடங்களும் பயன்படுத்தப்படலாம்...
புது டில்லி, மே.31- அமோக விளைச்சல், சாதனையான கொள்முதல் ஆகியவற்றின் விளைவாக தானியங்களைச் சேமித்து வைப்பதில் கிடங்கு பற்றாக்குறைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க அரசுத் துறை மற்றும் தனியார் துறையில் உள்ள உபரி கிடங்கு வசதிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன என்று மத்திய விவசாய மந்திரி ஜெகஜீவன்ராம் இங்கு நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.
உணவுத் தானியங்களைச் சேமித்து வைக்க தாற்காலிகமாகப் பள்ளி, கல்லூரிக் கட்டடங்களையும் பயன்படுத்த வேண்டி வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கிடங்குப் பிரச்னை காரணமாக ராஜஸ்தானில் கோதுமையைச் சேமித்து வைக்க முன்னாள் மகாராஜாக்களின் கோட்டைகளும், மாளிகைகளும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக மந்திரி தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இன்று மொத்த உணவு தானிய இருப்பு சுமார் 1 கோடியே 40 லட்சம் டன். இதில் சுமார் 40 லட்சம் டன் நடைமுறைத் தேவைக்கானது. கோதுமை கொள்முதலுக்கு 52 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுமார் 48 லட்சம் டன் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் மந்திரி ஜெகஜீவன்ராம் தெரிவித்தார். இந்தியா இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரதான உணவு ஏற்றுமதி நாடாகிவிடலாம் என்று மந்திரி நம்பிக்கை தெரிவித்தார்.
கிருஷ்ணா தகராறு போன்ற நதி நீர்த் தகராறுகள் தீர்க்கப்பட்டுள்ளதன் பலனாக இந்தியா உணவு தானிய விஷயத்தில் தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், கணிசமான அளவில் உணவு தானியத்தை ஏற்றுமதி செய்யும் வழி ஏற்படும் என்று அவர் கூறினார். ...
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தாவா தீர்ந்தது - 3 மாநிலங்கள் பங்கு பற்றி டிரிபுனல் தீர்ப்பு
புது டில்லி, மே. 31- கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தகராறு டிரிப்யூனல் மூலம் தீர்ந்தது நாட்டிலேயே முதல் தடைவையாக நதிநீர் தாவா டிரிப்யூனல் மூலம் தீர்வு காணப்படுகிறது.
இதனால், சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மூன்று ராஜ்யங்களுக்கு தண்ணீர் பங்கீடு வரையறுக்கப்பட்டுவிட்டது.
மத்திய அரசு 1969 -ல் இந்த டிரிப்யூனலை நிறுவி, கிருஷ்ணா நதி நீர் பிரச்னையை அதன் தீர்ப்புக்கு விட்டது.
மகாராஷ்டிரத்துக்கு 56,000 கோடி கனஅடி நீரும், கர்நாடகத்துக்கு 70,000 கோடி கனஅடி நீரும், கிடைக்கும். மீதத் தண்ணீர் ஆந்திராவுக்குக் கிடைக்கும்.
இன்று இங்கு நிருபர்களிடையே மத்திய விவசாய மந்திரி ஜகஜீவன்ராம், டிரிப்யூனல் தீர்ப்பு பற்றி அறிவித்தார். டிரிப்யூனல் தீர்ப்பு இறுதியானது. 3 மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் என்றார். ...