24.4.1976: ஆலய நிதியை வேறு பணிகளுக்கு செலவிட தடை - த.நா. அரசு
ஆலய நிதியை வேறு பணிகளுக்கு செலவிட தடை விதிக்கப்பட்டது பற்றி...
சென்னை, ஏப். 23 - கோவில் நிதியை பொதுக் காரியங்கள் என்கிற பெயரால் வேறு காரியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படியும், அவ்வாறு ஒதுக்குவதைத் தடை செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோல ஏற்கனவே மேற்கொண்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள், கல்யாண மண்டபங்கள் கட்டுவது ஆகியவைகளைத் தவிர புதிய பணிகள் எதையும் முன் அனுமதியின்றித் துவங்க வேண்டாம் எனவும் யோசனை கூறப்பட்டுள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து நம்பகமாக அறியப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த கால தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஆலய சொத்து முறைகேடுகள் குறித்து அரசுக்கும் அறநிலையத் துறைக்கும் ஏராளமான முறையீடுகள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருக்கின்றன.
Advertisement
தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்கள் கல்லூரி மேம்பாட்டுக்காக எனப் பெறப்பட்ட ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய், எந்தக் காரணத்திற்காக கோரிப் பெறப்பட்டதோ அந்த இனத்திற்குச் செலவிடப்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்றும் புகார் வந்துள்ளது. கொங்கு நாட்டில் உள்ள ஒரு பிரபலமான கோவில் உள்பட சில கோயில்களில் உண்டிகள் உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை களவாடப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. ...
கல்விமுறை மாறவேண்டும் என்கிறார் பிரதமர்
கௌஹாட்டி, ஏப். 23 - நாட்டின் தேவைகள் மாறி வருகின்றன; அதற்கேற்ப கல்வி முறையும் மாற வேண்டும் என்று, பிரதமர் இந்திரா காந்தி இன்று கௌஹாட்டியில் ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றில் கூறினார்.
கல்வியானது வேலை வாய்ப்புடன் உதவுபடியானதாயிருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலை கிடைப்பதற்கு வசதியாயிருக்கும் என்றும் பிரதமர் சொன்னார்.
மாணவரிடை உழைப்பி ன் மதிப்பை ஊட்டும் உணர்ச்சியை வளர்க்குமாறு ஆசிரியர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த வேலையையும் மட்டமென்று கருதக்கூடாது என்றார்.
உயர் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை ஆரம்பக் கல்விக்கும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கல்லூரிகளிலும் சர்வகலா சாலைகளிலும் சேரும்போது மாணவர்களுக்கு சிரமங்கள் எதுவும் இராது என்றும் பிரதமர் சொன்னார். ...