26.4.1976: அரசியல் சட்டத் திருத்த மசோதா: பார்லி. நடப்பு கூட்டத் தொடரில் வராது - உள்துறை மந்திரி தகவல்
அரசியல் சட்டத் திருத்த மசோதா பார்லி. நடப்பு கூட்டத் தொடரில் வராது...
ஹைதராபாத், ஏப். 25 - பார்லிமெண்டின் நடப்புக் கூட்டத் தொடரின் போது அரசியல் சட்டத்திருத்த, மசோதாக்கள் எவையும் கொண்டு வரப்படாது என்றும், பார்லிமெண்டின் அடுத்தக் கூட்டத் தொடரில்தான் உத்தேச திருத்த மசோதாக்கள் கொண்டுவரப்படக்கூடும் என்றும் உள்துறை அமைச்சர் கே. பிரம்மானந்த ரெட்டி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடையே பேசுகையில் கூறினார்.
அரசியல் சட்ட உத்தேசதிருத்தங்கள் பற்றி பல்வேறு அரங்குகளில் விவாதிக்கப்படுகிறது என்றும், உரிய நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்பாக அவை வைக்கப்படக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
பிரதமரின் 20 அம்ச பொருளாதாரத் திட்ட அமலை மதிப்பிட வட்டார அளவில் மதிப்பீடு கமிட்டிகளை அமைக்கலாம் என்றும், சட்டசபை உறுப்பினர்கள் இக் கமிட்டிகளில் இடம் பெறலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
Advertisement
வறுமையை ஒழிக்க மக்களின் வாழ்க்கை முறையும், நோக்கும் மாறவேண்டும் - பிரதமர் இந்திரா கருத்து
ஷில்லாங், ஏப். 25 - நாட்டிலிருந்து ஏழ்மையை அகற்றுவதற்கு மக்களின் வாழ்க்கை முறையும், நோக்கும் முழு அளவில் மாற வேண்டியது அவசியம் என்று பிரதமர் இந்திரா காந்தி இன்று கூறினார்.
கரம்பானி என்ற இடத்தில் ரூ.66 கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் கோபிலி நீர்மின் சாரத்திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டிப் பேசினார். மக்கள் குறிப்பாக விவசாயிகள் விஞ்ஞான சிந்தனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், நவீனமான முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"கோபிலி நீர் மின்சாரத் திட்டம்” போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றக் கூடியவை. ஏனென்றால் மின்சாரம் வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தேவைப்படுகிறது. கிடைக்கக்கூடிய மின்சாரத்தை சிறந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ...