14.6.1976: இந்தியா - ரஷியா கூட்டறிக்கை: உற்பத்தி துறையில் ஒத்துழைப்பு விரிவடையும்
இந்தியா - ரஷியா கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி...
புது டில்லி, ஜூன். 13 - ரஷியாவில் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் 6 தின விஜயம் முடிவடைந்ததையொட்டி இந்தியா - ரஷியா கூட்டு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இரு நாடுகளிடையே சகல விதத்திலும் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை விஸ்தரிக்க கூட்டு முயற்சி எடுப்பதென அறிக்கை உறுதி தெரிவித்தது.
மாஸ்கோவில் கூட்டறிக்கையில் ஜூன் 11ல் இந்திரா காந்தியும், சோவியத் கம்யூனிஸ் கட்சி பொதுக் காரியதரிசி பிரஜ்னேவும் கையெழுத்திட்டனர். கூட்டறிக்கை இன்று மாஸ்கோவிலும், புது டில்லியிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டது. துரிதமான ஒத்துழைப்பு முன்னேற்றத்தை யொட்டி இருநாடுகளின் தேவைகளும் மாறியிருக்கின்றன. இத்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு வர்த்தகத்துக்கான பண்டங்களின் ஜாபிதாவை விரிவாக்க இரு தரப்பு பேச்சுக்களின் தலைவர்களின் போது முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டறிக்கை அறிவித்தது.
சீரான வர்த்தக வளர்ச்சி குறித்து அறிக்கை திருப்தி தெரிவித்தது. 1973ல் வெளியான கூட்டறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட 150லிருந்து 200 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் பொருட்டு இரு நாடுகளும் ஒத்துழைப்புக்கான புது துறைகளை ஆராய்வது அவசியம் என்று அறிக்கை உறுதிபடுத்தியது.
Advertisement
Advertisement
விஜயத்தின் பலன்
சகல துறைகளிலும் மேற்கொண்டு ஒத்துழைப்பை பெருக்குவதற்கான வழிமுறைகளையும் கொள்கைகளையும், நோக்கங்களையும் கூட்டறிக்கை குறிப்பிட்டது. பிரதம மந்திரியின் சோவியத் விஜயமும், நடத்திய பேச்சு வார்த்தைகளும் இந்தியாவுக்கும் ரஷியாவுக்குமிடையே நேச உறவையும், சகலவிதமான ஒத்துழைப்பையும் மேற்கொண்டு பெருக்குவதற்குப் பெரிதும் உதவியுள்ளன. ஆசியாவில் சமாதானம் ஸ்திரமடையவும், உலக முழுவதும் சமாதானம் நிலைபெறவும் இவ்விஜயம் உதவும் என்று அறிக்கை கூறியது.
14 பக்கங்கள் கொண்ட கூட்டறிக்கையில் பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட்ட இரு தரப்பு பிரச்னைகளும் சர்வதேச பிரச்னைகளும் இடம் பெற்றன. ...
தமிழரசு கட்சி பழைய காங்கிரசுடன் இணைய முடிவு
சென்னை, ஜூன். 13 - தமிழரசுக் கட்சி இன்று திருச்சியில் கூடி பழைய காங்கிரசுடன் இணைவ தென்று ஏகமனதாக முடிவு செய்தது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தானம் இந்த முடிவை த. நா. பழைய காங்கிரஸ் தலைவர் பி. ராமச்சந்திரனுக்கு தந்தி மூலம் தெரிவித்துள்ளதாகவும், அக்கட்சியின் இந்த நல்ல முடிவை வரவேற்பதாக ராமச்சந்திரன் பதில் தந்தி அனுப்பியுள்ளதாகவும், த.நா. பழைய காங்கிரஸ் அலுவலகம் அறிவிக்கிறது.
தமிழரசு பொதுக் கட்சியின் கவுன்சில் கூட்டத்துக்கு சி.ஆர். சந்தானம் தலைமை வகித்தார். 100 பொதுக் கவுன்சில் உறுப்பினர்களில் 75 பேர் வந்திருந்தனர். சென்னை ஜி. கலிவரதன், இரா. சிதம்பரம், கோவை கே. பி. வையகம், கோவை நந்தகோபால், சென்னை ராயன் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேசிய சக்திகள் பழைய காங்கிரசுடன் சேரவேண்டுமென்று, திருச்சியில் நடைபெற்ற பழைய காங்கிரஸ் த.நா.கா.க. ஊழியர்கள் மகாநாடு விடுத்த வேண்டு கோளுக்கு செவிசாய்த்து தமிழரசு கட்சி பொதுக்கவுன்சில் இவ்வாறு முடிவு செய்துள்ளது.
தமிழரசு கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், 1967-ம் வருஷத்தில் ஏற்படுத்தியதாகும் தமிழரசு கட்சி. ...