இந்தியா கூட்டணி ஆலோசனையில் கரப்பான் பூச்சி கட்சி பற்றிய விவாதம்! என்ன நடந்தது?
இந்தியா கூட்டணி ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி!
புது தில்லி : இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பற்றிய விவாதம் இடம்பிடித்தது.
இது குறித்து நன்கறிந்த தரப்புகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பற்றிய தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர்.
கரப்பான் பூச்சி கட்சி இணையதளத்தில் தம் இருப்பை ஆணித்தரமாக நிலைநிறுத்தியிருந்தாலும் அதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருப்பதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு தலைவர் குறிப்பிட்டாராம். மேலும், கரப்பான் பூச்சி கட்சியின் எழுச்சியானது இந்திய இளைஞர்கள் அரசு நிர்வாக அமைப்பின்(சிஸ்டம்) மீது அதிருப்தியில் இருப்பதை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளதாகக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சரியாகச் செய்ல்படுவதாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் பேசும்போது, எதிர்க்கட்சிகள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் நெருக்கமாக செயல்பட வேண்டுமென்ற கருத்தையும் வெளிப்படுத்தினாராம்.
மமதா பானர்ஜி குறிப்பிடும்போது, அரசியல் கட்சிகள் தொடர்ந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டாலும் இதுபோன்ற மக்கள் இயக்கங்களையும் ஊக்குவிக்க வேண்டிய தேவையும் உள்ளது என்றாராம்.
சமூகத்தில் கடும் அதிருப்தி நிலவுவதையும் அதற்கான இடம் இருப்பதையும் கரப்பான் பூச்சி கட்சிக்கு கிடைத்த ஆதரவு அலை வெளிக்கொணருவதாக சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.
பரவலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பிடும்போது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியானது வழக்கமாக எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய இடங்களில் இப்போது கவனத்தை தன்பால் ஈர்க்கிறது என்று பேசப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒருமித்த கருத்தாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை ஆமோதித்தனராம்.