‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசை
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து தமிழிசை செளந்தரராஜன் பேட்டி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை ’ஹிட்’டை வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிப்பார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு எதிர்வினையாற்றும் வகையில் நாட்டில் புதிதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டி கட்சி உருவாக்கப்பட்டது.
ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே தொடங்கிய ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி - Cockroach Janta Party) என்ற சமூக ஊடகப் பக்கங்களை கோடிக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றத் தொடங்கினர்.
Advertisement
Advertisement
மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்த கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமில் பாஜகவை பின்தொடர்பவர்களைவிட (94 லட்சம்) இரண்டு மடங்குக்கு மேல் சிஜேபி பக்கத்தை 2.2 கோடி பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
பாஜகவுக்கு போட்டியாக கருதப்படும் இந்த சிஜேபியை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிஜேபி தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்ததாவது:
”கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஹிட் கொண்டு அடித்துவிடுவார். இளைஞர்கள் மீது குறை சொல்லக் கூடாது. அவர்கள் இன்று ஆக்கப் பூர்வமாக இருக்கிறார்கள்.
நான்கு நாள்களுக்கு முன்னதாககூட 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளார். 23 லட்சம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இளைஞர்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.
5 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர், நாட்டை 25 ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளார். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்று எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கிறார்கள். இளைஞர்கள் சொல்கிறார்கள் என்பதை நம்ப மாட்டேன். கரோனாவையே எதிர்கொண்ட பிரதமர் கரப்பான் பூச்சியை எதிர்கொள்வார்” எனத் தெரிவித்துள்ளார்.