உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்
பாகிஸ்தான், சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து ரஷிய அதிபர் கருத்து...
சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷியா ஆகியவைதான் உலகின் முதல் நான்கு இடங்களில் இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் செய்தியாளர்களுடன் உரையாடிய அந்நாட்டு அதிபர் புதினிடம், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த புதின் பேசியதாவது:
Advertisement
Advertisement
”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னைகளின் நுணுக்கங்களை நாங்கள் நன்கு அறிவோம். பாகிஸ்தான் முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடு என்று நான் கருதவில்லை. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடு, அது பல்வேறு நாடுகளுடன் பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. அவர்கள் சீனாவுடன் ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சீனாவுடன் உறவுகளை வளர்த்து வருகின்றனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவையே உலகின் முதல் நான்கு நாடுகள்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நுணுக்கமானவை மற்றும் பல பரிமாணங்களைக் கொண்டவை. அவற்றில் தலையிடுவது நல்லதல்ல. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் எல்லை விவகாரங்கள் உள்பட பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முயற்சித்து வருகின்றனர். ரஷியாவைப் பொறுத்தவரை, சீனா மற்றும் இந்தியாவுடன் எங்களுக்குத் தனிப்பட்ட உறவுகள் உள்ளன. யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை.
ரஷியா - இந்தியா இடையிலான உறவுகள் சீனாவைப் பாதிப்பதில்லை. அதேபோல் சீனாவுடனான எங்கள் உறவுகள் இந்தியாவைப் பாதிப்பதில்லை. உதாரணமாக 'பிரிக்ஸ்' அமைப்பை எடுத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில், இந்தியா மற்றும் சீனத் தலைவர்கள் இதில் சந்திக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன். அதன் மூலமே ரஷியா - இந்தியா - சீனா இடையிலான கூட்டமைப்பு உருவானது. பின்னர், பிரேசிலும் இணைந்தது.
இந்தியா அல்லது சீனா உள்பட எந்ஹ நாட்டுடனும் ஒத்துழைப்பதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நவீன் ஆயுதங்கள் தொடர்பாக நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைக்கிறோம். அவர்கள் 'பிரம்மோஸ்' ஏவுகணைகளைத் தயாரித்தனர். சு - 57 விமானத்தைப் பொறுத்தவரை, இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், தற்போது நீங்களே செய்யுங்கள், பின்னர் இணைகிறோம் என்று கூறினர்.” எனத் தெரிவித்தார்.