முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

9.3.1976: த.நா.வில் ராஷ்டிரபதி ஆட்சி அமலுக்கு ராஜ்யசபை அங்கீகாரம்

த.நா.வில் ராஷ்டிரபதி ஆட்சி அமலுக்கு ராஜ்யசபை அங்கீகாரம்...

Updated On : 8 மார்ச், 2026 at 10:30 PM
9.3.1976
பகிர்:

புதுடில்லி, மார்ச். 8- தமிழ் நாட்டில் ஜன. 31-ல் ராஷ்டிரபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டதை ராஜ்ய சபை இன்று அங்கீகரித்தது.

பிரகடனத்துக்கு அங்கீகாரத்தை சபையின் கோரும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு உள்துறை மந்திரி பிரம்மானந்த ரெட்டி பதிலளிக்கையில் ராஷ்டிரபதி ஆட்சி பிரகடனம் முற்றிலும் சரியே என்று பலமாக வாதித்தார். இந்நடவடிக்கையால் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றார்.

தி.மு.க.வின் செயல்களே தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு காரணம் என்றும் தி.மு.க. தனக்கு தானே குழி தோண்டிக் கொண்டது என்றும் உள்துறை மந்திரி கூறினார். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமோ அன்றி பிரிவினை போக்குகளுக்காக மட்டுமோ தி. மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. அக்கட்சியின் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களில் பேசுகையில் அதிக அளவு சுயேச்சை என்ற தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் யூனியனிலிருந்து, பிரிவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று பகிரங்கமாகவே கூறி வந்தனர். அத்துடன் மக்களிடையே வடநாட்டவர் எதிர்ப்பு உணர்ச்சியையும், ஹிந்தி எதிர்ப்பு போக்கையும் தி.மு.க. தலைவர்கள் நீடித்து வளரச் செய்தனர். பொதுக் கூட்டங்களில் இத்தகைய தேச விரோத உணர்ச்சிகளை அவர்கள் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர் என்று பிரம்மானந்த ரெட்டி மேலும் கூறினார்.

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலையும் போதுதான் மத்ய சர்க்கார் தலையிட வேண்டும் என்ற சில எதிர்க்கட்சி மெம்பர்களின் வாதங்களை பிரம்மானந்த ரெட்டி ஏற்கவில்லை. ஒரு மாநில சர்க்கார் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மட்டும் காரணம் என்பதில்லை. அரசியல் சட்ட ஷரத்துக்களின்படி ஒரு மாநில சர்க்கார் நிர்வாகத்தை நடத்தாவிட்டால் அதன் மீது மத்ய சர்க்கார் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சொன்னார்,

இப்போதுள்ள அரசியலமைப்பு குறித்து பிரதமர் கருத்து - "அதிலுள்ள பொத்தல்களை மட்டும் நீக்கவேண்டும்"

புதுடில்லி, மார்ச். 8- "இந்தியாவின் தற்போதைய அரசியல் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள பொதுவான வடிவமே நாட்டுக்கு நன்கு சேவை செய்ய முடியும். ஆனால், அதில் உள்ள "பொத்தல்களை" மட்டும் அகற்றிவிட வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி எகிப்து அல்-அஹ ரம் குழு பத்திரிகைகளின் சேர்மன் அப்துல் குதூஸுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறினார்.

இந்தியாவில் அரசியல் சட்டம் முறிவடைந்து விடவில்லை என்று அவர் சொன்னார். திட்டமிட்ட அரசியல் சவாலுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என்றும், இத்தகைய அரசியல் சவால் வேறு விதமான ஆட்சி முறைகளிலும் ஏற்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

மக்களின் ஜனநாயக ரீதியான, சட்டப்படியான விருப்பத்தை சிறு கோஷ்டிகள் தடுக்காமல் பாதுகாப்பதற்காகத்தான் அரசியல் சட்டத்திற்குத் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

பொருளாதார நீதி, அரசியல் சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாதது என்று தாம் கருதுவதாகவும், ஏழைகளுக்கும் வாய்ப்பிழந்தவர்களுக்கும் அதிக வாய் ப்பு அளிக்காவிட்டால் சுதந்திரத்திற்கு அர்த்தம் இல்லை என்றும் பிரதமர் கூறினார். பணக்காரர்களின் பொருளாதார அதிகாரத்தைக் குறைத்து, ஏழைகளுக்கு பாதுகாப்பு அளிக்க தனது அரசு புதிய திட்டங்களைத் தொடர்ந்து வகுத்து வருவதாக அவர் சொன்னார்.

ஜனாதிபதி ஆட்சி முறையை இந்தியாவில் கொண்டுவர அவர் விரும்புகிறாரா என்று கேட்டதற்கு, ஜனாதிபதி ஆட்சி முறையிலும் நெருக்கடிகள் உண்டு என்று பிரதமர் பதிலளித்தார். ஜனாதிபதி ஆட்சி முறையில் மக்களின் குரலுக்குச் செவி சாய்ப்பது குறைவாக இருக்கும் என்றார் அவர்.

மத்தியில் ஜனாதிபதி ஆட்சி முறை, மாநிலங்களிலும் அதே முறைக்கு வழி வகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

summary

9.3.1976: Rajya Sabha approves imposition of President's Rule in Tamil Nadu

முழு கட்டுரையைப் படிக்க →