24.3.1976: இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறுப்பு உடன்பாடு கையொப்பம்
இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறுப்பு உடன்பாடு கையொப்பம்...
புதுடில்லி, மார்ச்: 23 - இந்தியா, ஸ்ரீலங்கா இடையே கடல் எல்லையை வரையறுக்கும் வரலாற்றுச் சிறப்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இன்று கையொப்பமிட்டன.
வட்கே குடாவில் மீன் பிடித்தல் பற்றியும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டன.
அயல்நாட்டு இலாகாக் காரியதரிசி கேவல் சிங்கும், ஸ்ரீலங்கா அயல்நாட்டு இலாகாக் காரியதரிசி ஜயசிங்கேயும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அது இரு அண்டை நாடுகளின் வரலாற்றில் சிறப்பான நிகழ்ச்சி என வர்ணிக்கப்பட்டது. வங்க குடாவிலும், மன்னார் குடாவிலும் எல்லை வரையறுக்கப்பட்டது.
இரு கடல் சார்பு நாடுகள் இடையே கடல் எல்லை வரையறுப்பு பற்றிய ஒப்பந்தம் முதல் தடவையாக இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பற்றிய விவதங்கள் இன்று வெளியிடப்படவில்லை. அநேகமாக புதன்கிழமை அன்று பார்லிமெண்டில் தாக்கல் செய்ப்படலாம்.
இருநாடுகளும் 200 மைல் தூர பொருளாதார கடல் மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு அதே நேரத்தில் இவ்விதம் எல்லை வரையறுக்க முடியாத இடங்களில் இரு நாடுகளின் கரைகளிலிருந்தான நடுக்கோட்டை அடிப்படையாகக் கொண்டு கடல் எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டுள்ளன.
பாக் ஜலசந்தியைப் பொறுத்தமட்டில் இருநாடுகளுக்கும் இடையே 1974 ஜூன் மாதத்திலேயே ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவு ஸ்ரீலங்காவுக்குக் கிடைத்தது.
இன்று கையெழுத்தான இரு ஒப்பந்தங்களும் இந்தியா - ஸ்ரீலங்கா இடையே சுமார் மூன்றரை ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக ஏற்பட்டவையாகும்.
மத்திய, மாநில ஊழியருக்கு ஒரே ஊதிய விகிதம்: “இனி டில்லி பரிசீலிக்கும்"
புதுடில்லி, மார்ச்: 23 - விலைகள் ஸ்திரமடைந்து விட்டன. ஆகையால், மத்திய அரசு, மாநில அரசு, அரசுத் தொழில் துறை ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் தருவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று மத்திய நிதி மந்திரி சி. சுப்ரமணியம் இன்று ராஜ்ய சபையில் கூறினார்.
பண வீக்கத்தை எதிர்த்து அரசாங்கம் கடுமையாகப் போராடி வந்த சமயத்தில் தேசிய ஊதியக் கொள்கை பற்றிச் சிந்திக்க அரசுக்கு நேரமில்லாது போய்விட்டது என்றும் அவர் சொன்னார்.
பஞ்சப்படிகள் மாறுபடுவதால் தான் ஊதிய அமைப்பில் அத்தனை மாறுபாடுகள் இருக்கின்றன, ஒரே தொழிலில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஊதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். அரசுத் தொழில்களுக்கும் அரசாங்க இலாகாக்களுக்கும் ஊழியர்களின் இடையே ஊதியங்களில் வித்தியாசங்கள் இல்லாமலும் அரசு பார்த்துக் கொள்ளும் என்று உதவி நிதி மந்திரி சுசீலா ரோஹடகி கூறினார்.