7.5.1976: இந்தியா - பாக். பேச்சு அடுத்த வாரம் நடக்கும் - இஸ்லாமாபாத்தில் சந்திப்பு
இஸ்லாமாபாத்தில் இந்தியா - பாக். இடையே நடைபெறும் பேச்சு பற்றி...
புதுடில்லி, மே 6 - சிவில் விமான போக்குவரத்தையும், ரயில், ரோடு தொடர்பையும், ராஜ தந்திர உறவையும் மீண்டும் ஏற்படுத்துவது பற்றி இந்தியா, பாகிஸ்தான் பேச்சு மே 12 முதல 14 வரை இஸ்லாமாபாத்தில் நடக்கும்.
இந்திய கோஷ்டிக்கு வெளி நாட்டிலாகாக் காரியதரிசி ஜகத் மேத்தாவும், பாகிஸ்தான் தூது கோஷ்டிக்கு அதன் வெளி நாட்டிலாகாக் காரியதரிசி ஆகா சாஹியும் தலைமை வகிப்பார்கள். சிவில் விமான போக்குவரத்து, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து இலாகாக்களின் அதிகாரிகளும் அந்த தூது கோஷ்டிகளில் இருப்பார்கள்.
பிரதம மந்திரி இந்திரா காந்தியின் முயற்சியின் பேரில் இந்தப் பேச்சு நடக்கிறது. ஏப்ரல் 11-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவுக்கு எழுதிய கடிதத்தில், விமான போக்குவரத்து, ரயில், ரஸ்தா இணைப்பு, ராஜதந்திர உறவு ஏற்படுத்துதல் ஆகியவை பற்றி விவாதிக்க இந்தியா தயார் என இந்திரா காந்தி கூறியிருந்தார்.
Advertisement
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து ஸ்தாபனம் முன்புள்ள தன் வழக்கை வாபஸ் பெற பாகிஸ்தான் தயார் என குறிப்பிட்டு பூட்டோ எழுதிய கடிதத்துக்கு இந்திரா பதில் அனுப்பினார்.
லே-ஆப் அனுமதி, பெறுவதற்கான நடைமுறை
சென்னை, மே.6- தொழில் தகராறு விதிகளின் கீழ் தொழிலாளர்களை லே-ஆப் செய்யவும், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும், தொழில் நிறுவனத்தை மூடவும் அனுமதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது சம்பந்தமாக விரிவான நடைமுறையை தமிழ்நாடு சர்க்கார் அறிவித்திருக்கிறது.
உற்பத்தி புள்ளி விவரங்கள், முந்தைய 12 மாதங்களுக்கு மாத வாரியாக புள்ளி விவரம், உற்பத்தி சக்தி, வருடாந்திர உற்பத்தி, ஆர்டர் புத்தகங்களின் நிலவரம், வேலை நேரங்கள், ஷிப்ட்டுகள், ஆகியவை சம்பந்தமாக சுமார் 25 கேள்விகளுக்கு விவரமான பதில்களையும், விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ...