சொந்த மக்களையே இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா. அவையில் இந்தியா கடும் தாக்கு
இனப்படுகொலை சம்பவங்களில் பாகிஸ்தான் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐ.நா. அவையில் இந்தியா விமர்சனம்
இனப்படுகொலை சம்பவங்களில் பாகிஸ்தான் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுத மோதல்களில் பொதுமக்களை பாதுகாத்தல் குறித்த தலைப்பில் ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரீஷ் பர்வதேனேனி பேசியதாவது, இனப்படுகொலை சம்பவங்களில் நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. அமைப்பு ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய எல்லைதாண்டிய வன்முறையால், ஆப்கானிஸ்தானில் பொதுமக்களில் 750 பேர் பலியானதாகத் தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலும் வான்வழித் தாக்குதலாலே நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழக்கக் காரணமான 95 சம்பவங்களில் 94 சம்பவங்கள் பாகிஸ்தானால் நடத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த மார்ச் மாதமான ரமலான் மாதத்தில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல், எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயலே. இந்தத் தாக்குதலில் 269 பேர் பலியானதுடன், 122 பேர் காயமடைந்தனர்.
தொழுகை முடித்து மசூதியிலிருந்து திரும்பியவர்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இத்தகைய கொடூரமான செயல்கள் ஒருபோதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
ஏனெனில், தன் சொந்த மக்கள் மீதே குண்டுவீசி, திட்டமிட்ட இனப்படுகொலை செய்யும் ஒரு நாடுதான் பாகிஸ்தான் என்று தெரிவித்தார்.