கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கும்? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
கொட்டாவி விடும்போது மூளையிலிருந்து தண்டுவடத் திரவம் சுரப்பது பற்றி..
கொட்டாவி விடும்போது, மூளையைப் பாதுகாக்கும் திரவ ஓட்டத்தில் ஒரு அசாதாரண மற்றும் எதிர்பாராத விளைவு ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால், இதன் தாக்கம் எந்தமாதிரியானதாக இருக்கிறது என்பது குறித்து அறியப்படவில்லை.
விரைவில் அதுபற்றிய ஆய்வுகள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொட்டாவி விடுவதன் காரணம் பற்றி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திவரும் ஆய்வில் சில முக்கிய கூற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Advertisement
அதன்படி, மனிதர்கள் (இன்னும் சில உயிரினங்கள்) ஏன் கொட்டாவி விடும் திறனை பரிணாம வளர்ச்சி மூலம் பெற்றனர் என்பதைப் புரிந்துகொள்வதில் இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு முக்கியமான துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறது.
இந்த ஆராய்ச்சியானது, 22 ஆரோக்கியமான மனிதர்களின் தலை மற்றும் கழுத்துகளை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தது. அப்போது அவர்கள் கொட்டாவி விடவும், ஆழமாக மூச்சு விடவும், கொட்டாவியை அடக்கவும், சாதாரணமாக மூச்சு விடவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இதில், ஆச்சரியப்படும் விதமாக, கொட்டாவி விடும்போது மூளையிலிருந்து தண்டுவடத் திரவம் (CSF) வெளியேற்றப்பட்டது.
ஆழ்ந்த மூச்சு விடும்போது ஏற்படும் இயக்கத்திற்கு எதிர் திசையில், கொட்டாவி விடும்போது மூளைத் தண்டுவட திரவத்தில் (CSF) ஒரு அசைவு தூண்டப்படுகிறது என்று நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த சுவாசம் மற்றும் கொட்டாவி ஆகிய இரண்டும் மூளையிலிருந்து வெளியேறும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய இரத்தம் உள்ளே செலுத்தப்படுவதற்கு அதிக இடத்தை உருவாக்குகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கொட்டாவி விடும்போது இரத்த ஓட்டத்தின் திசை மாறாமல், இரத்த ஓட்டம் சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்கிறது.
அது மட்டுமல்ல, கைவிரல் ரேகையைப் போல, ஒவ்வொரு நபரும் ஒரு தனித்துவமான முறையில் கொட்டாவி விடுகிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். ஒருவர் கொட்டாவி விடும்போது ஒவ்வொருவரின் நாக்கு அசைவும் மாறுபடுகிறதாம்.
அதாவது, கொட்டாவி விடும்போது, மூளையை சுத்தப்படுத்தும் வகையில் மூளைத்தண்டு திரவம் சுரக்கிறது. எனவே, மூளையை சுத்தப்படுத்துவதில் கொட்டாவி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அல்லது மூளையை குளிர்விக்கிறது என்று பொருள் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.
அடுத்தமுறை கொட்டாவி விடும்போது, அது ஒரு சாதாரண நிகழ்வு என நினைக்காமல், மனித உடல், மூளையை சுத்தம் செய்ய இதுபோன்ற ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதை நினைத்து பெருமிதம் கொள்ளலாம்.