முகப்பு
இந்தியா

உர மானியத்தில் ரூ.5,000 கோடி ஊழல்: சமாஜவாதி எம்.பி. குற்றச்சாட்டு

நுண்ணூட்டச்சத்து அடிப்படையிலான உர மானியத்தில் ரூ. 5,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று மாநிலங்களவையில் சமாஜவாதி எம்.பி. நரேஷ் அகர்வால்

Updated On : 2 மார்ச் 2013, 1:47 am IST
பகிர்:

நுண்ணூட்டச்சத்து அடிப்படையிலான உர மானியத்தில் ரூ. 5,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று மாநிலங்களவையில் சமாஜவாதி எம்.பி. நரேஷ் அகர்வால் குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, நரேஷ் அகர்வால் கூறியதாவது: உர மானியத்தில் ரூ.5,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நான் தருகிறேன். சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நுண்ணூட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் விலை அதிகரிக்காது என உறுதியளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இக் கொள்கையின்படி, நிர்ணயிக்கப்பட்ட மானியமானது ஆண்டு அடிப்படையில் அனைத்து பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என நரேஷ் அகர்வால் குற்றம் சாட்டினார்.

துணைக் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசுகையில், ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா கூறுகையில், ""பொட்டாஷ், பாஸ்பரஸ் உர விலையேற்றம் தொடர்பாக தீவிரகவனம் செலுத்தி வருகிறோம். பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றுக்கு இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். அரசு மானியத்தை மட்டும் வழங்குகிறது. அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதில் தலையிடுவதில்லை'' என்றார்.

இந்த பதிலால் திருப்தியடையாத நரேஷ் அகர்வால் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பாஜக எம்.பி.க்களும் நரேஷுக்கு ஆதரவாக, "அரசு விவசாயிகளிடம் கொள்ளையடிக்கிறது' எனக் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.