முகப்பு
இந்தியா

பண்டாரா பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு மறுப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட

Updated On : 2 மார்ச், 2013 at 1:45 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டம் லக்கானி காவல்நிலைய சரகத்துக்கு உள்பட்டது முர்வாடி கிராமம். இங்கு 11 வயதுக்கு உள்பட்ட 3 சகோதரிகள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பள்ளியிலிருந்து திரும்பும்போது காணாமல் போயினர். பின்னர், அங்குள்ள பாழடைந்த கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பிரதேப் பரிசோதனையில் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

சி.பி.ஐ விசாரணை நடத்த கோரிக்கை:÷இந்த வழக்கில் போலீஸாரின் மெத்தனப் போக்கை கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணை கோரியும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை பேசினர்.

Advertisement

பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பிரகாஷ் ஜவடேகர் பேசியபோது, ""பண்டாரா பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசிடமிருந்து கோரிக்கை வரும்வரை காத்திருக்க தேவையில்லை. மத்திய அரசு தானாகவே முன்வந்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.

பாஜக உறுப்பினரான ஸ்மிருதி இரானி பேசுகையில், ""புகார் கொடுக்க வந்த 3 சிறுமிகளின் தாய் மற்றும்  பாட்டி, நள்ளிரவு 1.30 மணி வரை காவல் நிலையத்தில் காத்திருந்துள்ளனர். அதன் பின்பே, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு போலீஸார் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர்'' என்றார்.

பாஜகவை சேர்ந்த மாயா சிங், அஜய் சஞ்சேட்டி, விமலா காஷ்யப் சூட், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த வீர் சிங், திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்த கே.டி.சிங் உள்ளிட்ட எம்.பி.க்களும் இவ்விவகாரம் தொடர்பாக பேசினர்.

ஷிண்டே பதில்:÷இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியதாவது:÷""இச்சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. 3 பேரின் சடலத்தையும் 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில், கொல்லப்படுவதற்கு முன்பு, பாலியல் துன்புறுத்தலுக்கு சிறுமிகள் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவை உறுப்பினர்களின் உணர்வுகளை மாநில அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவோம். இந்த வழக்கு விசாரணை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. எனவே, மத்திய அரசு தலையிடாது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக அல்ல, பிற கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநில விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது'' என்றார் ஷிண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.