யூரியா கடத்தல் குறித்து திமுக எம்.பி. புகார்: பதில் தர அழகிரி வராததற்கு பாஜக கண்டனம்
மானிய விலையில் விநியோகம் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் யூரியா வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக
மானிய விலையில் விநியோகம் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் யூரியா வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை புகார் கூறினார்.
"இது குறித்து மத்திய ரசாயனம், உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா அளித்த விளக்கம் போதாது; அவையில் பதில் அளிக்க வராமல் துறையின் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஏன் தவிர்க்கிறார்? அவர் அவையில் பதில் அளிக்க நிரந்தரமாக விலக்கு பெற்றுள்ளாரா?' என்று பாஜக மூத்த உறுப்பினர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பினார். "முக்கியமான நேரங்களில் கூட அவர் அவைக்கு வராமல் இருப்பது சரியல்ல' என்றும் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால், யூரியா இறக்குமதியில் முறைகேடு நிலவுவதாக கேள்வி எழுப்பினார்.
Advertisement
அவரைத் தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், ""நாட்டின் யூரியா தேவையில் 25 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. விவசாயத் தேவைகளுக்காக யூரியாவுக்கு மத்திய அரசு மிக அதிக அளவில் மானியம் வழங்குகிறது. வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் யூரியா விலை மிகக் குறைவாக உள்ளது.
அதனால், இறக்குமதி செய்யப்படும் யூரியா வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. கடத்தலைத் தடுக்கவும், தனியார் ஆலைகள் உற்பத்தி செய்யும் உரங்களின் ஏற்றுமதியை தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா, "யூரியா கடத்தலை தடுக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை.
எனவே, யூரியா விநியோகத்தையும், அதன் பயன்பாட்டையும் கண்காணிக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம்' என்றார். அதையடுத்து பேசிய வெங்கய்ய நாயுடு, "மாநிலங்களவையில் மிகப்பெரிய விஷயம் மீது விவாதம் நடைபெறும்போது ஏன் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் (அழகிரி) அவைக்கு வராமல் இருக்கிறார்?
இது பற்றி உறுப்பினர்கள் எப்போது கேட்டாலும் "அவைக்கு வராமல் இருக்க அமைச்சர் (அழகிரி) அனுமதி பெற்றுள்ளார்' என கூறப்படுகிறது. அப்படியென்றால் அவர் நிரந்தரமாக அவைக்கு வராமல் இருக்க அனுமதி பெற்றுள்ளாரா என்பதை மாநிலங்களவை தலைவர் விளக்க வேண்டும்' என்றார். அதை ஆதரித்து, பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இது குறித்து, செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய வெங்கய்ய நாயுடு, "மாநிலங்களவைக்கு மு.க. அழகிரி ஏன் வராமல் இருக்கிறார்? அவருக்கு உடல் நலக்குறைவு இருக்குமானால் சரி.
ஆனால், இந்த அவையில் எப்போதுமே அவரது சார்பில் இணை அமைச்சர் பதில் அளிப்பது வழக்கமாக உள்ளது. அதற்கு அவை விதிகள் இடம்கொடுத்தாலும் துறையின் அமைச்சர் என்ற முறையில் அழகிரியின் பங்களிப்பு என்ன? அவர் என்ன கூற விரும்புகிறார்? அவரது போக்கு சரியல்ல. இதை பாரதிய ஜனதா கட்சி கண்டிக்கிறது' என்றார்.