அப்சல் குரு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது: சுஷீல் குமார் ஷிண்டே
தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது என மத்திய உள் துறை
தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது என மத்திய உள் துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ஷிண்டே மேலும் கூறியது: கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவின் உடல் திகார் சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினரும், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கோரி வருகின்றனர். சிறை விதிகளின்படி குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவரது உடலை ஒப்படைக்க முடியாது. எனினும், குருவை அடக்கம் செய்த இடத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தலாம்.
ஆளுநரை நியமிப்பது அரசின் உரிமை: சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் அஸ்வினி குமாரை நாகாலாந்து மாநில ஆளுநராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஷிண்டே கூறுகையில், ""யாரை வேண்டுமானாலும் மாநில ஆளுநராக நியமிக்க அரசுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் அஸ்வினி குமாரை
ஆளுநராக நியமித்ததில் தவறு இல்லை என்றார்.
அமைச்சரவை சிறப்புக் கூட்டம்: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் குற்றச் சட்டத் திருத்த மசோதா விஷயத்தில் சட்ட ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ""குற்ற சட்டத் திருத்த மசோதா குறித்து அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர். பாலியல் தாக்குதல் என குறிப்பிட வேண்டும் என்று சிலர் கூறிவரும் நிலையில் மேலும் சிலர், பாலியல் பலாத்காரம் என குறிப்பிட வேண்டும் என கூறுகின்றனர்'' என்றார்.