நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: மேலும் ஒரு வழக்கு பதிவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ திங்கள்கிழமை மேலும் ஒரு வழக்கைப் பதிவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ திங்கள்கிழமை மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. 5 நகரங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஜார்க்கண்ட் இஸ்பேட் தனியார் நிறுவனத்தின் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த முறைகேட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் 2006-ம் ஆண்டில் சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
இது தொடர்பாக நிறுவனத்தின் மீது, இதில் அடையாளம் காணப்படாத அரசு அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இந்த வழக்கு தொடர்பாக வாராணசி, ஹசாரிபாக், கொல்கத்தா, ராஞ்சி, தில்லி ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு நிறுவனங்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தல், விண்ணப்பத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. அந்நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் பலரும் துணை போயுள்ளனர் என்பது முக்கியக் குற்றச்சாட்டு.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கையில் இது தொடர்பாக தகவல் வெளியானது. இந்த முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.